முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டியின் சிறை தண்டனை ரத்து.! சென்னை ஐகோர்ட் தீர்ப்பு.!

Senthil Velan

புதன், 3 ஜூலை 2024 (12:21 IST)
அதிமுக முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டுகள் சிறை தண்டனை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 
 
அதிமுக ஆட்சிக் காலத்தில் விளையாட்டுத் துறை அமைச்சராக பதவி வகித்தவர் பாலகிருஷ்ணரெட்டி. கடந்த 1998-ஆம் ஆண்டு, ஓசூரை அடுத்த பாகலூரில் நடைபெற்ற போராட்டத்தில் பேருந்துகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியதாக,  பாலகிருஷ்ண ரெட்டி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 
 
இந்த சம்பவத்தில், மொத்தம் 108 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்த நிலையில், 16 பேரை குற்றவாளிகள் என அறிவித்து எம்.பி,  எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில், பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதால்,  அவர் அமைச்சர் பதவியை இழந்தார்.
 
இந்த தீர்ப்பை எதிர்த்து பாலகிருஷ்ண ரெட்டி உள்பட 16 பேர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரித்தார். அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பை நீதிபதி தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்திருந்தார். இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டுகள் சிறை தண்டனை ரத்து செய்து நீதிபதி ஜெயச்சந்திரன் இன்று தீர்ப்பளித்தார்.

ALSO READ: நீட் விவகாரத்தில் போலி பிம்பம் உடைந்துவிடும் என்ற பயமா.? திமுகவுக்கு அண்ணாமலை கேள்வி..!!
 
குற்றச்சாட்டுகளை நிரூபிக்க வலுவான ஆதாரங்கள் இல்லை என்றும் அடையாள அணிவகுப்பு ஏதும் நடத்தப்படவில்லை என கூறிய நீதிபதி, சிறப்பு நீதிமன்றத்தில் சாட்சிகளிடம்  முறையாக விசாரணை நடைபெறவில்லை எனக் கூறி சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்