ஓபிஎஸ் பக்கம் ஜம்ப் அடித்த ஈபிஎஸ் ஆதரவாளர்! – திண்டுக்கலில் பரபரப்பு!

வெள்ளி, 19 ஆகஸ்ட் 2022 (09:24 IST)
அதிமுக இடைக்கால பொதுசெயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் அவரது ஆதரவாளர் ஒருவர் ஓ.பன்னீர்செல்வத்தை சென்று சந்தித்துள்ளார்.

கடந்த ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுசெயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதுடன், கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களும் அதிமுகவிலிருந்து நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்த பொதுக்குழு கூட்டத்தை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் தொடர்ந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ஜூலை 11 அன்று நடந்த பொதுக்குழு செல்லாது என்றும், ஜூன் 23ல் இருந்த நடைமுறையே தொடரும் என்று உத்தரவிட்டது.

அதை தொடர்ந்து தற்போது மீண்டும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராகவே ஓ.பன்னீர்செல்வம் நீடிக்கிறார். இந்நிலையில் நீதிமன்றத்தில் இந்த உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் மேல்முறையீடு செய்துள்ளனர். அதே சமயம் இதை வாய்ப்பாக பயன்படுத்தி தனக்கான ஆதரவை நிலைநாட்ட ஓபிஎஸ் காய் நகர்த்தி வருகிறார்.

இந்நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு அளித்து வந்த வேடசந்தூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன் என்பவர் ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்துள்ளார். அனைவரும் ஒன்றிணைந்து கட்சியை பலப்படுத்த வேண்டும் என்ற ஓபிஎஸ்சின் அழைப்பை தொடர்ந்து பலரும் ஓபிஎஸ் ஆதரவு நிலையை எட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்