வெள்ளை அறிக்கையால் எங்களுக்கு அச்சம் கிடையாது - ஈபிஎஸ்!

செவ்வாய், 10 ஆகஸ்ட் 2021 (09:40 IST)
தமிழக அரசு வெள்ளை அறிக்கையால் எங்களுக்கு அச்சம் கிடையாது என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்துள்ளார். 

 
தமிழக அரசு நேற்று வெளியிட்ட வெள்ளை அறிக்கையில் கடந்த முறை ஆட்சி செய்த அதிமுக அரசு அதிக கடன் வாங்கி வைத்துள்ளதாக தெரிவித்திருந்தது. இந்நிலையில் இதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்துள்ளார். அவர் கூறியதாவது, 
 
தமிழக அரசு வெள்ளை அறிக்கையால் எங்களுக்கு அச்சம் கிடையாது. படிப்படியாக கடன் தொகை உயர்ந்தது. இது வளர்ச்சித் திட்டங்களுக்காக பெறப்படும் கடன். இதில் பாதிக்கும் மேல் மூலதனமாக இருக்கிறது. அதோடு மாநிலம் வளர்ச்சி அடைவதற்குரிய திட்டங்களை நிறைவேற்ற கடன் பெற்றே ஆக வேண்டியது அவசியம். 
 
தமிழகம் மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுமே பல்வேறு வழிகளில் கடன் வாங்கியே, வளர்ச்சிப் பணிகளை நடத்திக் கொண்டு இருக்கிறார்கள். மின்வாரியம், போக்குவரத்து, உள்ளாட்சியில் ஏற்பட்டுள்ள இழப்பு குறித்து நன்றாக தெரியும். தமிழகத்தில் இன்னும் மின்கட்டணம் உயர்த்தப்படவில்லை. ஆனால் மின் சாதனங்களின் விலை உயர்ந்து விட்டது. 
 
போக்குவரத்து கழகத்திலும் இந்தநிலையே உள்ளது. டீசல் விலை உயர்ந்த பிறகும், பேருந்து கட்டணத்தை நாங்கள் உயர்த்தவில்லை. அதனால்தான் இழப்பீடு ஏற்பட்டுள்ளது. எந்த அரசு வந்தாலும் மக்களுக்காக இது போன்ற இழப்பை சந்தித்தே ஆக வேண்டும் என தெரிவித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்