தமிழர்களின் நலனை அண்டை மாநிலங்களிடம் அடகு வைத்த திமுக.! எஸ்.பி வேலுமணி கண்டனம்..!!

Senthil Velan

புதன், 22 மே 2024 (13:24 IST)
தமிழ்நாட்டின் உரிமைகளை காக்க தவறிய விடியா திமுக அரசின் நீர்வளத்துறை அமைச்சருக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
 
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வார்த்தை ஜாலங்களில் கில்லாடிகளான தி.மு.க. அரசின் மந்திரிகளில், தலையாய மந்திரியான துரைமுருகன் சிலந்தி ஆற்றில் தடுப்பணை கட்டும் பிரச்சனை முதல், காவிரிப் பிரச்சனை வரை ஒன்றிய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று போராடுவோம் என்று கூறி மக்களை முட்டாளாக்கப் பார்க்கிறார் என்று தெரிவித்துள்ளார்.
 
தி.மு.க. ஆட்சிக்கு வரும்போதெல்லாம், அண்டை மாநிலங்களான ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதும், கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே அணை கட்ட முயற்சிப்பதும்,  கேரள அரசு சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதும், தி.மு.க. அரசின் எதிர்ப்பே இல்லாமல் சுதந்திரமாக நடைபெறுவதை மக்கள் பார்த்துக்கொண்டுதான் உள்ளனர் என்றும் எஸ்.பி வேலுமணி கூறியுள்ளார்.
 
சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதை அனைத்து பத்திரிகைகளும், ஊடகங்களும் வெளிச்சம் போட்டுக்காட்டி வருகின்றன என்றும் இச்செய்திகளின் அடிப்படையில் கேரள அரசின் நடவடிக்கைக்கு பசுமைத் தீர்ப்பாயம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டு, இரு மாநில அரசுகளுக்கும் நோட்டீஸ் அனுப்பி உள்ளது என்றும் அவர் சுட்டிக் காட்டி உள்ளார்.
 
தங்கள் குடும்பத்தினர் நடத்தி வரும் தொழில்களுக்காகவும், சுயநலத்திற்காகவும், தமிழக மக்களின் நலனை அண்டை மாநிலங்களிடம் அடகு வைப்பதை இந்த 'நாடக மாடல் தி.மு.க. அரசு' கைவிட வேண்டும் என்று எஸ்பி வேலுமணி வலியுறுத்தியுள்ளார். 

ALSO READ: வாக்குப்பதிவு இயந்திரத்தை அடித்து நொறுக்கிய எம்.எல்.ஏ.! ஆந்திராவில் பரபரப்பு..!!
 
அடுத்தவர்கள் மீது வீண் பழி சுமத்தி, தங்களை புனிதமானவர்களாகக் காட்டி மக்களை ஏமாற்றலாம் என்ற எண்ணத்தை தி.மு.க. ஆட்சியாளர்கள் கைவிட்டு, பசுமைத் தீர்ப்பாயம் மற்றும் சட்டத்தின் மூலம் துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்