சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதுகுறித்து பேசியுள்ள அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், பிரதமர் மோடி வருகைக்கு பிறகு அரசியல் மாற்றம் ஏற்பட்டுள்ளதா என தெரிய வரும் என பேசியுள்ளார்.
சிவகங்கையில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் “அதிமுக பிரிந்து சென்றதால்தான் கடந்த தேர்தலில் திமுக வெற்றிப்பெற்றது. அதன் பின்னர் கடும் முயற்சி எடுத்து அதிமுகவை ஒருங்கிணைக்கும் பணியை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா செய்துள்ளார். இந்த கூட்டணியில் புதிய கட்சியினரையும் இணைப்பது திமுகவை வீழ்த்துவதற்காகதான்.
தேர்தல் கூட்டணியை பொறுத்தவரை இன்னும் 6 மாதங்கள் இருக்கிறது/. 6 நொடியில் கூட அரசியல் மாற்றம் ஏற்படலாம். 2026 ஜனவரியில்தான் கூட்டணி நிலைபாடுகள் தெரிய வரும். பிரதமர் மோடி தமிழகம் வந்து சென்ற பின்னர்தான் அரசியல் மாற்றம் ஏற்பட்டுள்ளதா என தெரியவரும்.
திமுக ஆட்சியில் சில திட்டங்கள் பயனுள்ளதாக இருந்தாலும், நான்கரை ஆண்டு ஆட்சி மக்களுக்கு ஏழரை ஆட்சியாகவே இருந்துள்ளது. திமுக அகற்றப்பட வேண்டிய கட்சி. திமுக ஆட்சியில் சட்டம், ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. காவல்துறை சுதந்திரமாக செயல்படமுடியவில்லை. அம்மாவின் தொண்டர்கள் ஓரணியில் நின்று திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதே எங்கள் இலக்கு. அதன் காரணமாகவே ஒரே கூட்டணியில் இணைந்துள்ளோம்.
திமுக தோல்வி பயத்தால் உங்களுடன் ஸ்டாலின் என்று ஏதேதோ சொல்லி வருகிறார்கள். பிரதமருடை சிறந்த ஆட்சிக்கு அவரது மூன்றாவது தொடர் வெற்றியே சாட்சி” என பேசியுள்ளார்.
Edit by Prasanth.K