எல்லாவற்றுக்கும் தினகரனே காரணம் - சசிகலாவிடம் புலம்பித் தீர்த்த உறவினர்கள்

வியாழன், 12 அக்டோபர் 2017 (09:09 IST)
தற்போது சசிகலா குடும்பத்தினர் சந்தித்து வரும் பிரச்சனைகள் அனைத்திற்கும் டிடிவி தினகரனே காரணம் என திவாகரன் குடும்பத்தினர் புகார் கூறியதாக தெரியவந்துள்ளது.


 

 
உடல் நலக்குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தனது கணவர் நடராஜனை சந்திப்பதற்காக 5 நாட்கள் பரோலில் வெளிவந்தார் சசிகலா. தி.நகர் வீடு மற்றும் மருத்துவமனை தவிர வேறு எங்கும் செல்லக்கூடாது மற்றும் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்கிற கட்டுப்பாடுகள் அவரின் கையை கட்டிப்போட்டன.
 
எனவே, குடும்ப உறுப்பினர்களுடன் மட்டுமே அவர் அதிக நேரம் செலவு செய்தார். முக்கியமாக தினகரன் மற்றும் திவாகரன் குடும்பத்தினரே அவரை சுற்றி இருந்தனர். இதில் முக்கியமானவர் சசிகலாவின் சகோதரர் திவாகரனின் மகன் ஜெயானந்த். அப்போது,  திவாகரனுக்கும், தினகரனுக்கும் இடையே உள்ள பனிப்போர் குறித்தே அதிகம் விவாதிக்கப்பட்டதாம். 
 
நமது குடும்பம் தற்போது சந்தித்துள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் தினகரனே காரணம் என ஜெயானந்த் உள்ளிட்ட திவாகரனின் குடும்பத்தினர் சசிகலாவிடம் புலம்பியதாக தெரிகிறது. 
 
ஆர்.கே.நகர் தொகுதியில் நீங்கள் போட்டியிட வேண்டாம் எனக் கூறியும் தினகரன் போட்டியிட்டார். இரட்டை இலை சின்னம் பறிபோனதோடு, பணப்பட்டுவாடா புகாரிலும் சிக்கினோம்.   அதன் பின் இரட்டை இலை மீட்க லஞ்ச புகார் என பெயர் கெட்டுப்போனது. அமைச்சர்கள் வருமான வரி சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். 


 

 
எனவே, எடப்பாடி பழனிச்சாமியும், அமைச்சர்களும் நிறம் மாறத் தொடங்கினர். தினகரன் கட்சிப் பணிகளில் மட்டும் ஈடுபட்டிருந்தால் நமக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்காது. எல்லாவற்றுக்கு தினகரனின் அவசரமே காரணம்.  எனவே, நம்மை ஒதுக்க வேண்டிய நிர்பந்தத்தை எடப்பாடி தரப்புக்கு பாஜக மேலிடம் உருவாக்கியது. 
 
ஜெ. வின் ஆட்சியின் போது நாம் எப்படி செயல்பட்டோமோ அப்படி செயல்பட்டிருந்தால் ஆட்சியும், கட்சியும் இப்படி நம் கையை விட்டு போயிருக்காது” என கொட்டித் தீர்த்துள்ளனர்.
இதையடுத்து, தினகரனை அழைத்து பேசியுள்ளார் சசிகலா. ஆனால், அவர் சமாதானம் ஆவது போல் தெரியவில்லையாம். மேலும், எடப்பாடி துரோகம் செய்து விட்டார் என்ற பிரச்சாரத்தின் மூலம், ஜெ.விற்கு நமது குடும்பம் துரோகம் செய்து விட்டது என மக்கள் மத்தியில் நமக்கு இருந்த குற்றச்சாட்டு மறைந்து போனது என தனது செயலை நியாயப்படுத்தியதோடு, திவாகாரன் மீது பல புகார்களை கூறியுள்ளார் தினகரன்.
 
முடிவில், திவாகரன் சொல் கேட்டு நடந்துகொள் என சசிகலா கூறிய அறிவுரையை ஏற்க மறுத்துவிட்டாராம் தினகரன். எனவே,  இருவரையும் சமாதானம் செய்ய முடியாமல் சசிகலா கண்ணீர் வடித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது. 
 
பரோல் நேற்றோடு முடிவடைந்து விட்டதால், இன்று காலை பெங்களூர் சிறைக்கு சசிகலா புறப்பட்டு விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்