பரபரப்பாக நகரும் அதிமுக உட்கட்சி விவகாரம்: சசிகலாவை அவசரமாக சந்திக்க உள்ள தினகரன்!

ஞாயிறு, 4 ஜூன் 2017 (11:47 IST)
கட்சியில் இருந்து ஒதுங்கி இருப்பதாக அறிவித்த தினகரன் தற்போது ஜாமீனில் வெளியே வந்த பின்னர் மீண்டும் கட்சி பணிகளில் ஈடுபட இருப்பதாக அறிவித்துள்ளது அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 
 
அதிமுக துணைப் பொதுச்செயலாளராக சசிகலாவால் நியமிக்கப்பட்டவர் தினகரன். இவரை அதிமுக அமைச்சர்கள் சமீபத்தில் கட்சியில் இருந்து ஒதுக்கி வைப்பதாக அறிவித்தனர். தினகரனும் கட்சியின் நலன் கருத்தி தான் ஒதுங்கி இருப்பதாக கூறினார்.
 
அடுத்த சில தினங்களிலேயே தினகரன் இரட்டை சிலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
 
அதன் பின்னர் கடந்த மாதம் 31-ஆம் தேதி அவருக்கு ஜாமீன் வழங்கியது டெல்லி தனி நீதிமன்றம். இதனை தொடர்ந்து டெல்லி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், சென்னை சென்று கட்சிப் பணிகளில் ஈடுபடப்போவதாகவும், தன்னை நீக்கும் அதிகாரம் பொதுச்செயலாளர் ஒருவருக்கே உள்ளது எனவும் தெரிவித்தார்.
 
இதனையடுத்து நேற்று மாலை சென்னை பெசண்ட் நகரில் உள்ள அவரது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்த தினகரன், தமிழக அரசு நிலைக்க வேண்டுமென சிலரின் கருத்தைக் கேட்டு கட்சியிலிருந்து ஒதுங்கியிருப்பதாகக் கூறியதாகவும் வரும் திங்கள் அல்லது செவ்வாய் சிறையிலிருக்கும் சசிகலாவை சந்திக்க உள்ளதாகவும் கூறினார். மேலும் அதன்பிறகு அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு எடுக்கப்படும் என்றார் தினகரன்.
 
கட்சியில் இருந்து ஒதுங்கி இருப்பதாக கூறிய தினகரன், மீண்டும் கட்சி பணிகளில் ஈடுபட உள்ளதாகவும், அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்க உள்ளதாகவும், சசிகலாவை சந்திக்க உள்ளதாகவும் கூறியுள்ளது அதிமுக அமைச்சர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்