தினகரன் 10 மணிக்கு கைது; கசியவிட்டது 12 மணிக்கு: நள்ளிரவில் நடந்தது என்ன?

புதன், 26 ஏப்ரல் 2017 (09:14 IST)
இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக டிடிவி தினகரனை டெல்லி போலீசார் நேற்று இரவு கைது செய்தனர். இந்த கைது தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 
 
அதிமுகவின் துணைப் பொதுச்செயலாளராக சசிகலாவால் நியமிக்கப்பட்ட டிடிவி தினகரன் அதிமுக கட்சியை சசிகலா சிறைக்கு சென்ற பின்னர் வழிநடத்தி வந்தார். அதிமுகவின் சின்னமான இரட்டை இலை சின்னத்தை பெற இரு அணிகளும் முயற்சித்த நிலையில் அதனை தற்காலிகமாக முடக்கியது தேர்தல் ஆணையம்.
 
இந்நிலையில் டெல்லியில் சுகேஷ் சந்திரசேகர் என்ற இடைத்தரகர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 1.30 கோடி ரூபாய் பணத்தை கைப்பற்றினர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தியதில் இரட்டை இலை சின்னத்தை டிடிவி தினகரன் அணிக்கு வாங்கி கொடுக்க தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுப்பதற்காக டிடிவி தினகரன் பேரம் பேசியது தெரியவந்தது.
 
தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு 50 கோடி ரூபாய் லஞ்சம் கொடுப்பதாக பேரம் பேசிய டிடிவி தினகரன் அதில் முதற்கட்டமாக 10 கோடி ரூபாய் கொடுத்ததாக சுகேஷ் சந்திரசேகர் டெல்லி போலீசின் விசாரணையில் கூறியுள்ளார். இதனையடுத்து டிடிவி தினகரனுக்கு சம்மன் அனுப்பிய டெல்லி போலீஸ் அவரிடம் கடந்த சில நாட்களாக தொடர் விசாரணை நடத்தி வந்தனர்.
 
தொடக்கத்தில் சுகேஷ் சந்திரசேகரை யார் என்றே தெரியாது என மறுத்து வந்தார் தினகரன். டெல்லி போலீஸார் தினகரனும் சுகேஷ் சந்திரசேகரும் போனில் பேசிய ஆடியோ பதிவைப் போட்டுக்காட்டினர். அதன் பின்னர் தான் தினகரன் சுகேஷ் சந்திரசேகரை பார்த்ததையும் தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதையும் ஒப்புக்கொண்டார்.
 
இதனையடுத்து தொடர்ந்து விசாரணை நடத்திய டெல்லி போலிசார் அவரை நேற்று இரவு 10 மணிக்கு கைது செய்தனர். அவருடன் சேர்த்து அவரது உதவியாளர் ஜனார்த்தனன் மற்றும் நண்பர் மல்லிகார்ஜுனாவையும் கைது செய்தனர். அசம்பாவித சம்பவங்களை தடுக்க சென்னை, தஞ்சாவூர் பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட பின்னர் நள்ளிரவு 12 மணிக்கு தினகரன் கைது செய்யப்பட்டதை டெல்லி போலிஸ் கசியவிட்டனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்