காலா பட வழக்கு : கை விரித்த நீதிமன்றம் : கர்நாடகாவில் வெளியாவதில் சிக்கல்

செவ்வாய், 5 ஜூன் 2018 (13:27 IST)
காலா படத்தை திரையிடுமாறு யாரையும் கட்டாயப்படுத்த முடியாது என கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

 
கர்நாடக மாநிலத்தில் ரஜினிகாந்த் நடித்த 'காலா' திரைப்படத்திற்கு அம்மாநில திரைப்பட வர்த்தக சபை தடை விதித்துள்ள நிலையில் அந்த மாநிலத்தில் 'காலா' வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும், 'காலா' படத்தை வெளியிடுவது குறித்த பிரச்சனையில் அரசு தலையிடாது என்றும் கன்னட மக்கள் 'காலா' படம் திரையிடுவதை விரும்பவில்லை என்றும் கர்நாடக முதல்வர் குமாரசாமியும் கூறிவிட்டார். 
 
கர்நாடகாவில் காலா படம் திரையிட உத்தரவிட வேண்டும் மேலும் படம் வெளியாகும் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரி கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் தயாரிப்பாளர் தனுஷ், ஐஸ்வர்யா தனுஷ் உள்ளிட்டோர் சார்பில் தாக்கல் செய்யப்பட்டது.
 
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, காலா படத்தை திரையிடுமாறு உத்தரவிட முடியாது நீதிபதிகள் கூறினர். அரசிடம் முறையிட்டு நடவடிக்கை எடுக்காவிட்டால் மட்டுமே நீதிமன்றத்தை நாட வேண்டும். பாதுகாப்பு, சட்டம்-ஒழுங்கு ஆகியவை அரசு சம்பந்தப்பட்டது.  எனவே, தியேட்டர், ரசிகர்களுக்கு பாதுகாப்பு வழங்குவது குறித்து அரசிடமே முறையிட வேண்டும் என நீதிபதிகள் கூறினர்.
 
நீதிமன்றமும் கைவிட்டு விட்டதால், கர்நாடகாவில் காலா படம் வெளியாவது இனி கர்நாடக அரசின் கையிலேயே இருக்கிறது. எனவே, காலா படம் கர்நாடகாவில் வெளியாகுமா என்கிற சந்தேகம் மீண்டும் வலுத்துள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்