சொந்த தொகுதியான சேப்பாக்கம் வருகை தந்த உதயநிதி.. வழக்கம் போல் துணிகளால் மறைப்பு..!

Siva

திங்கள், 23 ஜூன் 2025 (15:49 IST)
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் தொகுதிக்கு வருகை தந்தபோது, அவர் செல்லவிருந்த பாதையில் இருந்த குடிசை பகுதிகளும், பக்கிங்காம் கால்வாயும் துணிகளை கொண்டு மறைக்கப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் தங்கள் கருத்துக்களை கடுமையாக பதிவிட்டு வருகின்றனர்.
 
உதயநிதி தனது சேப்பாக்கம் தொகுதி மக்களுக்கு கோரிக்கை மனுக்களை பெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், அவரது வருகையை ஒட்டி, ஒருபுறம் அசுத்தமாக காட்சியளித்த பக்கிங்காம் கால்வாயையும், மறுபுறம் எளிய மக்கள் வசிக்கும் குடிசைகளையும் மறைக்கும் வகையில் இருபுறமும் திரைச்சீலைகள் கட்டப்பட்டிருந்தன. இந்த செயல் பொதுமக்கள் மத்தியிலும், அரசியல் வட்டாரங்களிலும் பேசுபொருளாக மாறியுள்ளது.
 
கடந்த மே 31ஆம் தேதி, மதுரைக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்றபோதும் இதே போன்ற ஒரு சம்பவம் நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது. அவர் சென்ற வழியில் இருந்த பந்தல்குடி கழிவுநீர் கால்வாய், அவரது பார்வைக்கு தெரியாதவாறு அலங்கார துணியால் மறைக்கப்பட்டது. பெரும் விமர்சனங்கள் எழுந்த நிலையில், அந்தத் துணி பின்னர் அகற்றப்பட்டது.
 
தலைவர்களின் வருகையின்போது, நிஜ நிலைமைகளை மறைக்க இது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுவது குறித்து பொதுமக்கள் மத்தியில் அதிருப்தி எழுந்துள்ளது. 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்