எடப்பாடியை குமரிக்கு ஓட வைத்த ராகுல்: கசிந்த தகவல்!

செவ்வாய், 12 டிசம்பர் 2017 (14:01 IST)
குமரி மாவட்டத்தை சமீபத்தில் ஓகி புயல் கடுமையாக தாக்கியது. இந்த புயலால் பல சேதங்களை கண்ட குமரி மாவட்டம் பல மீனவர்களின் இழப்பால் இன்னமும் மீண்டு வரவில்லை. இந்நிலையில் புயல் வந்து 12 நாட்கள் கழித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று குமரி மாவட்டம் சென்றுள்ளார்.
 
பல்வேறு அரசியல் கட்சிகளின் அறிக்கைகள், கண்டனங்கள், நிர்பந்தங்களுக்கு பின்னர் புயலால் பாதிக்கப்பட்ட மக்களை அக்கறையுடன் பார்க்க 12 நாட்களுக்கு பின்னர் சென்றிருக்கிறார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
 
மீனவர்கள் உயிரையும், அவர்களது வாழ்வையும் ஒரு பொருட்டாக மதிக்காமல் கோவை எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்திலும், ஆர்கே நகர் தேர்தல் பிரச்சாரத்தில் பிசியாகவும் இருந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தற்போது திடீரென குமரிக்கு விசிட் அடித்திருப்பதற்கு பின்னணியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இருப்பதாக தகவல்கள் வருகின்றன.
 
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஓகி புயலால் பாதிக்கப்பட்ட குமரிக்கு விரைவில் வரலாம் என்ற தகவல் கிடைத்த பின்பே அவசரமாக முதல்வரின் குமரி பயணம் திட்டமிடப்பட்டிருக்கிறது என கோட்டை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
அனைத்துக் கட்சித் தலைவர்களும் முதல்வர் குமரி செல்ல வேண்டும் என்று அறிக்கை விட்டனர். இந்நிலையில் டிசம்பர் 14-ஆம் தேதி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஒகி புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களைப் பார்ப்பதற்காக திருவனந்தபுரம் வருகிறார் எனவும், அவர் அப்படியே கன்னியாகுமரி வருவதற்கும் திட்டமிட்டிருக்கிறார் எனவும் எடப்பாடி பழனிச்சாமிக்கு தகவல் கிடைத்துள்ளது.
 
ராகுல் காந்தி குமரி வந்தால் மத்திய அரசையும், தமிழக அரசையும், இதுவரை வந்து பார்க்காத முதல்வரையும் கடுமையாகச் சாட வாய்ப்பிருக்கிறது. இதனால் தேசிய அளவில் எடப்பாடியின் பெயர் கெட்டுப்போக வாய்ப்புள்ளதால், அதற்கு முன்பாக புயல் தாக்கி 12 நாட்கள் கழிந்து குமரிக்குப் புறப்பட்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்