இன்று திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், திரை உலகில் போதை கலாச்சாரம் அதிகரித்து வருவதாகவும், சில நடிகர்கள் கைது செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியளிப்பதாகவும் தெரிவித்தார். மேலும் தமிழக அரசு மதுக்கடைகளை மூட வேண்டும் என்றும், போதைப்பொருட்கள் விற்பனையை தடுக்க கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
போதைப்பொருள் விற்பனைக்கென தனி உளவுத்துறை இருந்தாலும், தனிப்படை அமைத்து கட்டுப்படுத்த வேண்டும் என்று தெரிவித்த திருமாவளவன், தமிழக அரசுதான் இளைஞர்களை காப்பாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
அரசியல் கூட்டணி குறித்துப் பேசிய அவர், "பாரதிய ஜனதா கட்சி மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி இருக்கும் கூட்டணிகளில் நாங்கள் இருக்க மாட்டோம் என்ற கொள்கையில் உறுதியாக இருக்கிறோம்," என்று தெளிவுபடுத்தினார். "திமுக கூட்டணியில் பாமக வருமா என்பது மீண்டும் மீண்டும் கேட்கப்படும் கேள்வி. அப்படி ஒரு நிலை வந்தால் கேட்கலாம்," என்று தெரிவித்தார்.
மேலும், திமுக கூட்டணியில் இட எண்ணிக்கை பற்றி இன்னும் பேசவில்லை என்றும், அதில் எந்த பிரச்சனை வராது என்றும், பேச்சுவார்த்தையின்போது அனைத்தையும் பார்த்துக்கொள்வோம் என்றும் மற்றொரு கேள்விக்கு பதிலளித்தார்.