6 - 8 சீட்டுகள் கொடுத்து எங்களை ஏமாற்ற முடியாது: 234 தொகுதிகளிலும் நிற்க தகுதியானவர்கள்: திருமாவளவன்

Mahendran

புதன், 25 ஜூன் 2025 (11:09 IST)
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், "ஆறு முதல் எட்டு சீட்டுகள் கொடுத்து இனி எங்களை ஏமாற்ற முடியாது. நாங்கள் 234 தொகுதிகளிலும் போட்டியிடும் அளவுக்கு தகுதியானவர்கள்," என்று பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
நேற்று நடந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விருது வழங்கும் விழாவில் பேசிய அவர், "எத்தனை தொகுதிகளில் போட்டியிட போகிறீர்கள் என்று திரும்பத் திரும்ப எங்களை கேட்கிறார்கள். அவர்களுக்கு சிறுத்தைகளை மதிப்பிட தெரிவதில்லை. தற்காலிக பலன்களுக்காக இயக்கம் நடத்துபவர்களுடன் அவர்கள் நம்மை ஒப்பிட்டு பார்க்கிறார்கள். 
 
எங்களுக்கு டீ, பன்  கொடுத்து இனி ஏமாற்ற முடியாது. 'ஆறு முதல் எட்டு சீட்டுகள் கொடுத்தோம், அதற்கு மேல் அவர்களுக்கு சீட்டு கொடுக்க மாட்டோம், அதிகபட்சமாக 10 சீட்டுகளுக்கு மேல் தரமாட்டோம்' என்று மதிப்பீடு செய்திருந்தால், அந்த மதிப்பீட்டை மாற்றிக்கொள்ளுங்கள்," என்று கூறினார்.
 
மேலும், "நாங்கள் 234 தொகுதிகளிலும் போட்டியிடும் அளவுக்குத் தகுதியானவர்கள். இதை நான் ஆணவத்தில் சொல்லவில்லை. தேர்தல் கணக்கில் சொல்லவில்லை. சமூக மாற்றத்திற்கான அடிப்படை பார்வையில் சொல்கிறேன்," என்று திருமாவளவன் திட்டவட்டமாக தெரிவித்தார்.
 
திருமாவளவனின் இந்தப் பேச்சு, திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்திவிட்டது என்பதை தெளிவாக காட்டுகிறது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்