சென்னையில் மெட்ரோ பணிகள்.. இன்று முதல் முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்..!

Mahendran
சனி, 18 மே 2024 (08:29 IST)
சென்னையில் மெட்ரோ பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இன்று முதல் ஒரு வாரத்திற்கு ஒரு சில இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இது குறித்து போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
 
பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் வடமலை தெரு சந்திப்பு முதல் குட்டி தெரு சந்திப்பு வரை சாலை முழுவதும் ஆக்கிரமிப்பு செய்து மெட்ரோ ரயில் நிலையம் கட்டுமான பணி மேற்கொள்ள உள்ளதால், வாகனங்கள் பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் வடமலை தெரு சந்திப்பிலிருந்து பட்டாளம் சந்திப்பை நோக்கி நேராக செல்ல இயலாது. எனவே மே 18 முதல் 24ம் தேதி வரை ஒரு வார காலத்திற்கு சோதனை அடிப்படையில் கீழ்கண்ட போக்குவரத்து மாற்றங்கள் செயல்படுத்தப்படுகிறது. 
 
டவுட்டன் சந்திப்பிலிருந்து பெரம்பூர் பேரக்ஸ் சாலை வழியாக வரும் வாகனங்கள், வடமலை சந்திப்பிலிருந்து பட்டாளம் சந்திப்பை நோக்கி நேராக செல்ல இயலாது.  அத்தகைய வாகனங்கள் வடமலை தெரு சந்திப்பில் இடது புறம் திரும்பி வடமலை தெரு, அருணாசலம் தெரு மற்றும் வெங்கடேச பக்தன் தெரு வழியாக செல்லலாம்.
 
வடமலை தெரு, அருணாசலம் தெரு மற்றும் வெங்கடேச பக்தன் தெரு ஆகிய தெருக்கள் ஒரு வழி பாதையாக மாற்றப்படுகிறது. 
 
பட்டாளம் சந்திப்பிலிருந்து பெரம்பூர் பேரக்ஸ் சாலை மற்றும் அஸ்டபுஜம் சாலை வழியாக டவ்டன் சந்திப்பை நோக்கி செல்லும் 2 மற்றும் 4 சக்கர வாகனங்களின் தற்போதைய போக்குவரத்தில் எந்த மாற்றமும் இல்லை. 
 
புளியந்தோப்பு மற்றும் ஓட்டேரி சந்திப்பிலிருந்து விஜிசி பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்களின் தற்போதைய போக்குவரத்தில் எந்த மாற்றமும் இல்லை
 
இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்