சென்னை - ஒட்டுமொத்த இந்தியாவைப் பிரதிபலிக்கும் நிலைக்கண்ணாடி- முதல்வர் மு.க. ஸ்டாலின்

செவ்வாய், 22 ஆகஸ்ட் 2023 (14:25 IST)
தமிழகத்தின் தலைநகரான  சென்னைக்கு இன்று  384 ஆம் பிறந்தநாள். இதையொட்டி தலைவர்கள்  பலரும் வாழ்த்துகள் கூறி வரும் நிலையில்,  'சென்னை - ஒட்டுமொத்த இந்தியாவைப் பிரதிபலிக்கும் நிலைக்கண்ணாடி ' என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து  முதல்வர் மு.க.ஸ்டாலின்,  தன் டுவிட்டர் பக்கத்தில்,

’பேரறிஞர் அண்ணா தமிழ் நிலத்துக்கு, தமிழ்நாடெனப் பெயர் சூட்டினார். தமிழினத் தலைவர் கலைஞர் தமிழ்நாட்டின் தலைநகருக்குச் சென்னை எனப் பெயர் மாற்றினார்!

கோடிக்கணக்கான மக்களின் வாழ்வியலோடு பிணைந்துவிட்ட சொல் என்பதா - ஊர் என்பதா - உயிர் என்பதா சென்னையை?

சென்னை - ஒட்டுமொத்த இந்தியாவைப் பிரதிபலிக்கும் நிலைக்கண்ணாடி. பன்முகத்தன்மையின் சமத்துவச் சங்கமம்!

வாழிய வள்ளலார் சொன்ன 'தருமமிகு சென்னை'! ‘’என்று தெரிவித்துள்ளார்.
 
முன்னாள் முதல்வரும்,  அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தன் டுவிட்டர் பக்கத்தில்,


‘’சாதி மத பேதமின்றி வந்தோரை வாழ வைக்கும்  தமிழகத்தின் தலைநகரமாக மட்டுமின்றி கலை நகரமாகவும் கலாச்சார நகரமாகவும் விளங்கும் சென்னை  தோற்றுவிக்கப்பட்ட தினம் இன்று!

கனவுகளோடு நாடி வருபவர்களுக்கு முகவரி தேடித் தந்த சென்னையின் வயது 384.

உழைப்பிற்கு அடையாளமாக பெயர் பெற்ற சென்னையின் வரலாற்றை பேணி காப்போம்! சென்னையின் பெருமையை போற்றுவோம்! அனைவருக்கும் மெட்ராஸ் தின வாழ்த்துகள்

இது நம்ம சென்னை! ‘’ என்று தெரிவித்துள்ளார்.
 
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை  தன் சமூக வலைதள பக்கத்தில்,


''தமிழகத்தின் தலைநகரமான சென்னை மாநகரை அமைப்பதற்காக இடம் வாங்கப்பட்ட தினமான, ஆகஸ்ட் மாதம் 22ஆம் நாளான இன்று, #MadrasDay எனச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

சென்னை மாநகரம், ஜாதி மதம் பாராது வந்தோரை எல்லாம் வாழவைக்கும். உழைக்கத் தயங்காதவர்களுக்கு, இங்கே உயர்வடையத் தடையில்லை. சென்னையில் பிறந்த பல சாதனையாளர்கள் உலகம் முழுவதும் கோலோச்சிக் கொண்டிருக்கிறார்கள்.

1639 ஆம் ஆண்டு தொடங்கி, கடந்த 384 ஆண்டுகளில், இந்திய அளவிலும், உலக அளவிலும் முக்கியமான நகரமாக உருவாகியிருக்கும் நமது சென்னை, இன்னும் பலப்பல நூற்றாண்டுகள் சீரும் சிறப்புமாக இருக்கவும், மேலும் பல சாதனையாளர்களை உருவாக்கவும்  தமிழக பாஜக சார்பாக, அனைவருக்கும் இனிய #MadrasDay வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று பதிவிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்