சென்னை - கோவை வந்தே பாரத் ரயிலில் கட்டண வேறுபாடு: ரயில்வே நிர்வாகம் விளக்கம்

வியாழன், 13 ஏப்ரல் 2023 (11:35 IST)
சென்னை கோவை இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலில் கட்டண வேறுபாடு என ரயில்வே துறையை தெரிவித்துள்ளது. 
 
ஏப்ரல் 8ஆம் தேதி பிரதமர் மோடி சென்னை கோவை இடையேயிலான வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்தார். வாரத்தில் ஆறு நாட்கள் இயக்கப்படும் இந்த ரயிலில் ஏழு ஏசி சேர் பெட்டிகளும் ஒரு ஏசி எக்ஸிக்யூட்டிவ் பெட்டிகளும் என மொத்தம் எட்டு பெட்டிகள் இருக்கின்றன. 
 
இந்த நிலையில் சென்னை கோவை வந்தே பாரத் ரயிலில் எக்ஸிக்யூட்டிவ் சேர் வகுப்பு கட்டணம் 2485 என்றும் ஏசி சேர் வகுப்பு கட்டணம் 1365 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.  ஆனால்  கோவையில் இருந்து சென்னை வரும்போது, எக்ஸிகியூட்டிவ் சேர் கார் வகுப்பு கட்டணமாக ரூ.2,310 ஆகவும், ஏசி சேர் கார் வகுப்பு கட்டணம் 1,215 ஆகவும் உள்ளது. இந்த வேறுபாடு ஏன் என்பது குறித்து ரயில்வே துறை விளக்கம் அளித்துள்ளது. அந்த விளக்கத்தில் கூறியிருப்பதாவது;
 
இது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது:  சென்னை - கோவை டும் வந்தே பாரத் ரயிலில் எக்ஸிக்யூட்டிவ் சேர் காரில் அடிப்படைக் கட்டணம் ரூ.1,900, உணவு கட்டணம் ரூ.349, முன்பதிவு கட்டணம் ரூ.60, அதிவிரைவு கட்டணம் ரூ.75, ஜிஎஸ்டி ரூ.101 என மொத்தம் 2,485 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஏசி சேர் கார் வகுப்பில் அடிப்படைக் கட்டணம் ரூ.941, உணவு கட்டணம் ரூ.288, முன்பதிவு கட்டணம் ரூ.40, அதிவிரைவு கட்டணம் ரூ.45, ஜிஎஸ்டி ரூ.51 என ரூ.1,365  நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
 
கோவையில் இருந்து காலை 6 மணிக்குப் புறப்படும் வந்தே பாரத் ரயிலில் செய்தித்தாள், தேநீர் மற்றும் சிற்றுண்டி வழங்கப்படும்.அதேநேரம், சென்னையில் இருந்து பகல் 2.25 மணிக்குப் புறப்படும் ரயிலில் மாலையில் செய்தித்தாள், தேநீர், ஸ்நாக்ஸ் மற்றும் இரவு உணவும் வழங்கப்படுகிறது. அதனால் எக்ஸிக்யூட்டிவ் சேர் காரில் ரூ.175-ம், ஏசி சேர் காரில் ரூ.150-ம் அதிகமாக உள்ளது என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்