பிரபலங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் எழும் சூழ்நிலைகளில், மத்திய அரசு உளவுத்துறை அறிக்கையின் அடிப்படையில் பாதுகாப்பு வழங்குகிறது. அந்த வரிசையில், நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி, தேர்தலை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் செய்ய உள்ளார். மேலும், சமூக ஊடகங்களில் சில அச்சுறுத்தல்கள் எழுந்ததை தொடர்ந்து, மத்திய அரசு அவருக்கு Y பிரிவு பாதுகாப்பு வழங்க கடந்த மாதம் தீர்மானித்தது.
இந்நிலையில், மார்ச் 14ஆம் தேதி முதல் இந்த பாதுகாப்பு அமலாகும் என தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன்பு, வெளிநாட்டு பாதுகாப்பு பணியாளர்கள் அவருக்கு பாதுகாப்பு வழங்கி வந்தனர். இனி, மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) கமாண்டோக்கள் அவருக்கு பாதுகாப்பு வழங்கவுள்ளனர்.
வழக்கமாக, Y பிரிவு பாதுகாப்பு பெற்ற நபருக்கு துப்பாக்கியுடன் ஆயுதம் ஏந்திய 8 முதல் 11 பாதுகாப்பு அதிகாரிகள் இணைக்கப்படுவர். ஆனால், இந்த பாதுகாப்பு விஜய் தமிழகத்தில் இருக்கும் நேரத்தில் மட்டுமே அமலில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.