​பேருந்து கட்டணம் உயர்வு எதிரொலி; நடத்துநர் மீது கத்தி வீசிய பயணி

ஞாயிறு, 21 ஜனவரி 2018 (16:59 IST)
அரசுப் பேருந்துகளுக்கான டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் புதிய கட்டண தொகையை கேட்ட நடத்துனர் மீது பயணி ஒருவர் கத்தி வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

 
தருமபுரி மாவட்டம் தொட்டம்பட்டி கிராமத்தை சேர்ந்த சகோதரர்களான வெற்றிவேல், வேலன் ஆகியோர் நேற்று மாலை மத்தூரிலிருந்து போச்சம்பள்ளிக்கு செல்ல அரசு விரைவு பேருந்தில் ஏறியுள்ளனர்.
 
அப்போது நடத்துனர் அவர்களிடம் புதிய டிக்கெட் கட்டண தொகையை கேட்டுள்ளார். இதில் அதிர்ச்சி அடைந்தவர்கள் நடத்துநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த வேலன், பையில் வைத்திருந்த கத்தியை எடுத்து நடத்துநர் மீது வீசியுள்ளார்.  
 
நடத்துனர் விலகியதால் காயம் இன்றி தப்பித்தார். உடனே வேலன் பேருந்தில் இருந்து குதித்து தப்பி விட்டார். வெற்றிவேலை பயணிகள் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்