திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஒரு தவறான அடையாளம் காரணமாக, பிணவறையில் இருந்து ஒரு முதியவரின் சடலம் பிகாருக்கு அனுப்பப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருத்தணியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்ற 60 வயது முதியவர் வயிற்று வலியால் அவதிப்பட்டு, விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் உயிரிழந்தார். அவரது உறவினர்கள் போலீசில் அனுமதி பெற்று திருவள்ளூரில் சடலத்தை பெற வந்தபோது, வேறு ஒருவரின் சடலம் வழங்கப்பட்டது.
அந்த சடலம், பிகார் மாநிலத்தைச் சேர்ந்த மனோஜ் மாஞ்சி என்ற 55 வயதானவரின் பிணம் என்பதும், திருவள்ளூர் முதியவரின் பிணம் தவறாக பிகாருக்கு அனுப்பி வைக்கப்பட்டது என்பதும் பின்னர் தெரியவந்தது. இதனால் உறவினர்கள் அதிர்ச்சியில் சடல அறையை முற்றுகையிட்டனர். சிசிடிவி பதிவுகளை சரிபார்த்தபோது, மருத்துவமனை நிர்வாகத்தின் தவறுதலால் சடலங்கள் மாற்றப்பட்டதாக உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, ராஜேந்திரனின் சடலத்தை மீண்டும் திரும்பப் பெற போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். சம்பவத்தில் தங்களின் பொறுப்பில் தீவிரக் கவனம் காட்டாத பெண் மருத்துவர் ஒருவரை நிர்வாகம் பணியிலிருந்து தற்காலிகமாக நீக்கியுள்ளது.