அஜித்குமார் மரணம்: தவெக தலைவர் விஜய்யின் முடிவில் திடீர்மாற்றம்!

Mahendran

புதன், 2 ஜூலை 2025 (17:10 IST)
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் மடப்புரம் கோவிலில் பக்தரின் நகை காணாமல் போன வழக்கில், கோவில் காவலாளி அஜித் குமார், காவல் நிலைய விசாரணையின்போது உயிரிழந்தது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 
 
இந்தக் கொடூர சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்தும், அஜித்குமாருக்கு நீதி கேட்டும் தமிழக வெற்றி கழகம் சார்பில் நாளை அதாவது ஜூலை 3ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தவெக தலைவர் விஜய் அறிவித்திருந்தார். ஆனால் தற்போது இந்த ஆர்ப்பாட்டம் ஜூலை 6 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது,
 
தவெக ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டிருந்த சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் ஆசிரியர்கள் போராட்டம் நடைபெறுவதால், தமிழக வெற்றி கழகத்தின் போராட்ட தேதி மற்றும் இடம் மாற்றப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
 
இது குறித்து, தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் என். ஆனந்த் தனது 'எக்ஸ்'   பக்கத்தில் கூறியிருப்பதாவது: கழகத் தலைவர் விஜய்யின் உத்தரவின்பேரில், சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மடப்புரம் கோவில் காவலர் அஜித் குமார் மரணத்திற்கு நீதி கேட்டும், உயர் நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பின்கீழ் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியும், கடந்த 4 ஆண்டுகளில் 24 பேர் காவல் நிலையத்தில் மரணம் அடைந்தது குறித்து உயர்நீதிமன்றமே அதிருப்தி தெரிவித்துள்ள நிலையில், இது குறித்துத் தமிழ்நாடு அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வலியுறுத்தியும், தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரப்பட்ட இடம், அன்றைய தேதியில் வேறு காரணத்திற்குப் பயன்படுத்தப்பட இருப்பதாகக் கூறி காவல் துறையால் அளிக்கப்பட்ட மாற்று இடத்தில் (சென்னை, சிவானந்தா சாலையில்) 06.07.2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10 மணிக்குக் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது என்பதை நம் கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதலோடு தெரிவித்துக்கொள்கிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்