கோடைகாலம் தொடங்கி, பள்ளி தேர்வுகள் முடிந்த நிலையில், விடுமுறை பெற்ற பலரும் சொந்த ஊர் மற்றும் சுற்றுலா தலங்களுக்கு பயணம் செய்கிறார்கள். இதனால், சென்னையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு செல்லும் ரயில்களில் முன்பதிவு முடிந்து, காத்திருப்போர் பட்டியலில் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
பண்டிகைகள் மற்றும் தொடர் விடுமுறையின் போது வழக்கமாக செல்லும் விரைவு ரயில்களில், பயணத்தேவையை கருத்தில் கொண்டு கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படும். பள்ளி, கல்லூரி தேர்வுகள் முடிந்த பிறகு, கோடை விடுமுறையை கொண்டாட மக்கள் சொந்த ஊர்கள் மற்றும் சுற்றுலா தலங்களுக்கு அதிகமாக பயணம் செய்கிறார்கள்.
இதனை முன்னிட்டு, அடுத்த மாதம் முதல் பயணிகளின் வசதிக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதுடன், வழக்கமான ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கவும் ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.
முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில், நாடு முழுவதும் 500-க்கும் மேற்பட்ட விரைவு ரயில்களில் படிப்படியாக கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட உள்ளன. தேவைக்கேற்ப, முக்கிய வழித்தடங்களில் செல்லும் விரைவு ரயில்களில் மூன்று கூடுதல் பெட்டிகள் வரை சேர்க்கப்படும்.
முன்பதிவு மற்றும் காத்திருப்போர் பட்டியல் தொடர்பான தகவல்களை தெற்கு ரயில்வே ஆய்வு செய்து வருகிறது. இதன் அடிப்படையில், திருநெல்வேலி, நாகர்கோவில், கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய நகரங்களுக்கு செல்லும் விரைவு ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.