போயஸ் கார்டனில் நடிகர் அஜித்: சசிகலாவுடன் ரகசிய சந்திப்பு!

செவ்வாய், 27 டிசம்பர் 2016 (08:34 IST)
பிரபல தமிழ் நடிகர் அஜித் குமார் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அன்பை பெற்றவர். நடிகர் அஜித்தும் அவர் மீது நல்ல மரியாதை வைத்திருந்தார். இந்நிலையில் ஜெயலலிதா வசித்த வீடானா போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லத்தில் நேற்று நடிகர் அஜித் வந்ததாக கூறப்படுகிறது.


 
 
உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் 75 நாட்கள் சிகிச்சை பெற்று போராடி உயிரிழந்தார் ஜெயலலிதா. அவர் மரணமடைந்த பின்னர் அவர் வகித்து வந்த அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு கடும் போட்டியும், குழப்பமும் நிலவுகிறது. இந்நிலையில் அவரது தோழி சசிகலா பொதுச்செயலாளராக பதவியேற்று கட்சியை வழி நடத்த வேண்டும் என சில அதிமுக மூத்த நிர்வாகிகள் கூறி வருகின்றனர்.
 
இதனையடுத்து பல பிரமுகர்கள், பிரபலங்கள் போயஸ் கார்டன் சென்று சசிகலாவை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் அஜித் குமார் நேற்று மாலை போயஸ் கார்டன் சென்று சசிகலாவை சந்தித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
முதல்வர் ஜெயலலிதா மரணமடைந்த செய்தியை கேட்டதும் பல்கேரியா நாட்டில் படப்பிடிப்பில் இருந்த நடிகர் அஜித் உடனடியாக அங்கிருந்து கிளம்பி சென்னை வந்து விமான நிலையத்தில் இருந்து நேரடியாக ஜெயலலிதா சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்