ஆர்.கே.நகர் இடைத் தேர்தலை ரத்து செய்யக்கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு

புதன், 20 டிசம்பர் 2017 (10:00 IST)
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலை ரத்து செய்யக்கோரி கோவையை சேர்ந்த முகமது ரஃபீக் என்பவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு இன்று அவசர வழக்காக விசாரணைக்கு வருகிறது.

ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் தள்ளிப்போன சென்னை ஆர்.கே நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் நாளை(டிசம்பர் 21-ம் தேதி) நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என ஆளுங்கட்சியான எடப்பாடி அணியின் சார்பில் மனுசூதனனும், ஆளுங்கட்சியை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என எதிர்கட்சியான திமுக வின் சார்பில் மருதுகணேஷும், சுயேச்சையில் போட்டியிடும் டிடிவி தினகரனும்,  பி.ஜே.பி-யின் சார்பில் கரு.நாகராஜனும் மற்றும் இதர சுயேச்சை வேட்பாளர்களும் இத்தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
 
இந்நிலையில் ஆர்.கே.நகர் தொகுதி முழுவதும் உள்ள வாக்களர்களுக்கு ஓட்டுக்கு 10000 வரை பணம் வழங்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதுகுறித்து கோவையைச் சேர்ந்த முகமது ரஃபீக் அளித்துள்ள மனுவில், கடந்த முறை ஆர்.கே நகரில் பணப்பட்டுவாடாவின் காரணமாக இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டதாகவும் ஆனால் தற்பொழுதும் அதேபோல் ஆர்.கே நகரில் பல்வேறு கட்சியை சேர்ந்த நபர்கள் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.  
 
எனவே தேர்தல் நடத்துவதற்கான சூழல் தற்போது இல்லை என்பதால் ஆர்.கே.நகர் இடைத் தேர்தலை ரத்து செய்யுமாறு முகமது ரஃபீக் உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு அளித்துள்ளார். இந்த மனு இன்று அவசர வழக்காக டெல்லி உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்