மனவேதனையால் தற்கொலைக்கு முயற்சித்த அரசுப் பேருந்து ஓட்டுநர்

வெள்ளி, 23 பிப்ரவரி 2018 (08:51 IST)
சிவகங்கையில் வழக்கறிஞர்கள் தாக்கியதால் மனவேதனையடைந்த அரசு பேருந்து ஓட்டுநர் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் செல்லும் சாலையை சீரமைக்கக் கோரி சிவகங்கை வழக்கறிஞர்கள் சங்கத்தினர் பல ஆண்டாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம்  எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
 
இதனையடுத்து சாலையை சீரமைக்கக் கோரி சிவகங்கை வழக்கறிஞர்கள் சங்கத்தினர் நேற்று பேருந்து நிலையம் அருகே போராட்டம் நடத்தினர். அப்போது திருச்சியிலிருந்து பரமக்குடி செல்லும் அரசு பேருந்தை ஓட்டுநர் செல்வராஜ் வேகமாக இயக்கினார். பேருந்தை நிறுத்தி வழக்கறிஞர்கள் ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பேசிக்கொண்டிருக்கும் போதே ஓட்டுநர் பேருந்தை இயக்கியதில் தங்கப்பாண்டியன் என்ற வழக்கறிஞர் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைந்தார். இதனால் ஆத்திரமடைந்த மற்ற வழக்கறிஞர்கள்  ஓட்டுநரை தாக்கினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 
 
இந்நிலையில் பணி முடிந்து வீட்டிற்கு திரும்பிய ஓட்டுநர் செல்வராஜ், வழக்கறிஞர்கள் தன்னை பலரது முன்னிலையில் தாக்கியதை நினைத்து மனவேதனை அடைந்தார்.  அவமானம் தாங்காமல் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். வீட்டில் இருந்தவர்கள் அவரை பரமக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. போலீஸார்.  இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்