ஆர்.எஸ் பாரதி மீது அவதூறு வழக்கு.! நானே நீதிமன்றத்தில் ஆஜராவேன்.! அண்ணாமலை..!!

Senthil Velan

வியாழன், 4 ஜூலை 2024 (12:49 IST)
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் தன் மீது குற்றம் சுமத்திய திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி மீது அவதூறு வழக்கு தொடர இருப்பதாக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
 
சேலத்தில் செய்தியாளரிடம் பேசிய அவர், புதிய கல்விக் கொள்கையில் இந்தி கட்டாய மொழி இல்லை என்றும் அது ஆப்ஷனலாக மாற்றப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
 
உருது திணிப்பை எதிர்க்காதது ஏன்?
 
புதிய கல்விக் கொள்கை அறிவித்த பின்னர்தான் தமிழ் மொழியை பயிற்று மொழி என திமுக அரசு அறிவித்ததாக அண்ணாமலை கூறினார். இந்தி திணிப்பை எதிர்க்கும் திமுக, ஏன் உருது திணிப்பை எதிர்க்கவில்லை என்று கேள்வி எழுப்பினார்.
 
ஆர்.எஸ் பாரதி மீது வழக்கு:
 
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்திற்கு நான் தான் காரணம் என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி கூறியதாகவும், அதற்கு நான் அனுப்பி நோட்டீசுக்கு அவர் பதில் அளிக்கவில்லை எனவும் தெரிவித்தார். எனவே வருகிற செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் நானே ஆஜராகி ஆர்.எஸ் பாரதி மீது அவதூறு வழக்கு தொடர இருப்பதாக அண்ணாமலை குறிப்பிட்டார். மேலும் நாய் கூட பி.ஏ பட்டம் பெறுவதாக கூறி,  கடுமையாக உழைத்து படித்தவர்களை ஆர்.எஸ் பாரதி அவமதித்து விட்டதாக புகார் தெரிவித்தார்.
 
அதிமுகவுக்கு துணிச்சல் இல்லை:
 
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட அதிமுகவுக்கு துணிச்சல் இல்லை என்று விமர்சித்த அண்ணாமலை, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடாமல் திமுகவுக்கு அதிமுக மறைமுக உதவி செய்கிறது என்று குற்றம் சாட்டினார். தேர்தலில் போட்டியிட்டால் மூன்றாவது, நான்காவது இடத்திற்கு வந்து விடுவோம் என்ற அச்சத்தில்தான் அதிமுக போட்டியிடவில்லை என்று அண்ணாமலை கடுமையாக விமர்சித்தார்.

ALSO READ: அதிமுக பிரமுகர் வெட்டிக்கொலை.! சட்டம் ஒழுங்கு குறித்து இபிஎஸ் சரமாரி கேள்வி.!!
 
திமுக சார்ந்த அரசியலை விஜய் முன்னெடுத்தால் சாதகமாக இருக்கும், எங்கள் வளர்ச்சிக்கு உதவும் என்றும் அண்ணாமலை கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்