”டீ குடுக்குறதே பெருசு... குறை சொல்றியா?” – மாமியாரை அடித்துக் கொன்ற மருமகள்!

புதன், 8 மார்ச் 2023 (12:07 IST)
புதுக்கோட்டை மாவட்டத்தில் குடிக்க டீ கேட்ட மாமியாரை மருமகள் அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள மலைக்குடிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவருக்கு கனகு என்ற பெண்ணுடன் திருமணமாகி ஒரு மகனும் உள்ளார். சுப்பிரமணியின் பெற்றோரும் அதே பகுதியில் வசித்து வந்த நிலையில் கடந்த சில ஆண்டுகள் முன்னதாக சுப்பிரமணியின் தந்தை உயிரிழந்துள்ளார். இதனால் தனது தாய் பழனியம்மாளை தன்னோடே வைத்து பார்த்துக் கொண்டுள்ளார் சுப்பிரமணி.

ஆனால் சுப்பிரமணியின் தாயார் பழனியம்மாளுக்கும், மனைவி கனகுவுக்கும் ஏழாம் பொருத்தம் என கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு அனைவரும் சாப்பிட்டு விட்டு தூங்கிய நிலையில் நள்ளிரவில் பழனியம்மாளுக்கு தலைவலி ஏற்பட்டுள்ளது. கனகுவிடம் தனக்கு சூடாக டீ வேண்டுமென பழனியம்மாள் கேட்டுள்ளார். கனகுவும் தூக்கக் கலக்கத்தில் டீ போட்டு கொண்டு வந்து கொடுத்துள்ளார்.

ALSO READ: மனைவியை 5 துண்டுகளாக வெட்டி 2 மாதங்கள் தண்ணீர் தொட்டியில் மறைத்து வைத்த கணவன்..!

ஆனால் கனகு கொடுத்த டீ ஆறி போயிருந்ததால் பழனியம்மாள் கனகுவிடம் வாக்குவாதம் செய்துள்ளார். நள்ளிரவு நேரத்தில் எழுந்து டீ போட்டு கொடுத்தும் மாமியார் திட்டியதால் கோபமடைந்த கனகுவும் பதிலுக்கு பேசத் தொடங்கியுள்ளார். வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த கனகு அருகில் இருந்த இரும்பு கம்பி ஒன்றை எடுத்து மாமியார் பழனியம்மாளை தாக்கியுள்ளார்.

பழனியம்மாளின் அலறல் சத்தத்தை கேட்டு எழுந்த சுப்பிரமணி மற்றும் அக்கம்பக்கத்து வீட்டினர் உடனடியாக பழனியம்மாளை மருத்துவமனை கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பழனியம்மாள் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் பழனியம்மாள் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளதுடன், மருமகள் கனகுவையும் கைது செய்துள்ளனர். ஒரு டீ விவகாரத்தில் மாமியாரை மருமகளே அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்