டேட்டிங் செயலி மூலம் அறிமுகமான ஓர் இளைஞர், பெண் மருத்துவரை பாலியல் ரீதியாக சுரண்டி, கட்டாயக் கருக்கலைப்புக்கு வற்புறுத்தியதுடன், அவரது தனிப்பட்ட படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டியுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக 27 வயது இளைஞர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
அந்தேரியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் பணிபுரியும் 28 வயது பெண் மருத்துவர், 2023ஆம் ஆண்டு 'டேட்டிங் ஆப்' மூலம் டோங்கரியை சேர்ந்த இளைஞரை சந்தித்துள்ளார். இருவரும் சம்மதத்துடன் பழகி வந்த நிலையில், அந்த இளைஞர் ரகசியமாக பெண் மருத்துவரின் அந்தரங்கமான புகைப்படங்களை எடுத்துள்ளார்.
இந்த ஆண்டு பிப்ரவரியில் நிலைமை தலைகீழானது. அந்த பெண் கர்ப்பமான நிலையில், கருக்கலைப்பு செய்யுமாறு இளைஞர் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. அதன் பிறகு, அவர் அந்த பெண் டாக்டரை சந்திப்பதையும் தவிர்த்துள்ளார்.. பின்னர், அந்த இளைஞருக்கு வேறொருவருடன் நிச்சயதார்த்தம் நடந்திருப்பது தெரியவந்ததும், திருமண வாக்குறுதி அளித்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பெண் மருத்துவர் அதிர்ச்சியடைந்தார்.
அவர் காவல் நிலையத்தை அணுகி புகார் கொடுத்த நிலையில் , புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கட்டாயக் கருக்கலைப்பு, குற்ற மிரட்டல், சுரண்டல் உள்ளிட்ட பல பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள இதுகுறித்து விசாரணை நடந்து வருவதாகவும் விரைவில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.