10ம் வகுப்பு மாணவன் பள்ளியில் தற்கொலை! பேருந்துகளை கொளுத்திய உறவினர்கள்? - திருநெல்வேலியில் அதிர்ச்சி!

Prasanth K

வெள்ளி, 18 ஜூலை 2025 (09:33 IST)

திருநெல்வேலியில் தனியார் பள்ளியில் மாணவன் விஷமருந்தி தற்கொலை செய்துக் கொண்ட நிலையில், பள்ளி பேருந்துகளை உறவினர்கள் கொளுத்தியதாக வெளியான செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் அப்பகுதியை சேர்ந்த மாணவன் ஒருவர் 10ம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த 7ம் தேதி அந்த பள்ளியில் நிகழ்ச்சி ஒன்று நடந்துள்ளது. அப்போது மாணவனை ஆசிரியர் ஒருவர் பலபேர் முன்னால் வைத்து திட்டியதாகவும், பெற்றோரை அழைத்து வருமாறு கூறியதாகவும் கூறப்படுகிறது.

 

இதனால் மாணவன் பள்ளி வளாகத்திலேயே விஷம் குடித்து மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக மாணவனை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர் பள்ளி நிர்வாகத்தினர். கடந்த 10 நாட்களாக சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி சிறுவன் நேற்று உயிரிழந்தான்.

 

இதை தொடர்ந்து பள்ளி நிர்வாகத்தின் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி மாணவனின் பெற்றோர், உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் காவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளித்ததன் பேரில் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதற்கிடையே மாணவரின் உறவினர்கள் சிலர் தனியார் பள்ளி பேருந்துகள் மீது பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதில் 2 பேருந்துகளும் எரிந்து சேதமான நிலையில், இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்