வெற்றிலையின் மருத்துவகுணம் கிடைக்க என்ன செய்யவேண்டும் தெரியுமா...?

வெற்றிலை மூன்று ரகத்தில் பயிர் செய்யப்படுகிறது. இந்த மூன்று ரகத்தையும் தனித்தனியே பார்க்கும் போது இதை தெளிவாக புரிந்து கொள்ளலாம். கருப்பு நிறம்  இல்லாத தளிர் நிறம் உள்ள வெற்றிலைக்கு வெள்ளை வெற்றிலை என்று பெயர். இது மணமாக இருக்கும். 

கருப்பு நிறத்தில் உள்ள வெற்றிலைக்கு கருப்பு வெற்றிலை அல்லது கம்மாறு வெற்றிலை என்று பெயர். கற்பூர மணம் உள்ள வெற்றிலை தாமரை இலை போன்று  பெரியதாகவும் நல்ல நிறத்தோடும் இருக்கும்.இதற்கு கற்பூர வெற்றிலை என்று பெயர். இந்த மூன்று விதமான வெற்றிலைகளும் சுவையில் விறுவிறுப்பு பொருந்திய கார்ப்புத்தன்மை உடையதாகும்.
 
கம்மாறு வெற்றிலைச் சாறை தினமும் காலை உணவிற்கு பிறகு அரை ‘அவுன்ஸ்’ வீதம் மூன்று நாள் குடித்து வந்தால் வாத, பித்த கபத்தால் ஏற்படும்  ஏற்றத்தாழ்வை குறைக்கும்.
 
உடலில் நீர் ஏற்றம், தலையில் நீர் ஏற்றம், தலை பாரம் உணவு செரியாமை, மந்தம், குரல் கம்மல் வயிற்றுவலி, வயிற்று உப்புசம் ஆகியவை நீங்கும். இந்த  வெற்றிலையை பாக்கும் சுண்ணாம்பும் சேர்த்து உபயோகிக்கும் போது தாம்பூலம் என்கிறோம்.
 
இந்த தாம்பூலத்தை உபயோகிக்கும் முன் வெற்றிலையின் காம்பையும், நுனியையும் பின்புறத்தில் உள்ள நரம்பையும் நீக்கியே உண்ணவேண்டும். அப்படி நீக்காமல்  உண்பதால் வெற்றிலையின் மருத்துவ குணம் கிடைக்காமல் போகும். இப்படி உண்பவர்களிடம் லட்சுமி சேரமாட்டாள் என்று ஒரு பழ மொழியும் உள்ளது.
 
அது மட்டுமல்லாமல் வெற்றிலை போடும் போது முதலில் பாக்கை மெல்லக் கூடாது. ஏன் என்றால் பாக்கு துவர்ப்புத் தன்மை உடையது. இத்தன்மையால் உமிழ்நீர்  சுரக்காது. எனவே ஒரு வெற்றிலையை மென்ற பிறகே பாக்கு வெற்றிலையை மெல்ல வேண்டும். இப்படி செய்வதால் துவர்த்தல், சொக்குதல், மூர்ச்சையாதல், பிசுபிசுத்தன்மை முதலியன ஏற்படாமல் இருக்கும்.
 
அப்படி இல்லாமல் வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு, இவைகளை ஒன்றாக மெல்லும் போது அதில் நின்று ஊறிய முதல் நீர் நஞ்சாகவும், இரண்டாவது நீர் மிகு  பைத்தியம் தருபவையாகவும், மூன்றாவது நீர் அமிர்தமாகவும், நான்காவது நீர் அதி இனிப்பாகவும்,ஐந்து மற்றும் ஆறாவது நீர்கள் பித்தத்தோடும், அக்கினி மந்தம்,  ஆகியவற்றை உண்டாக்கும் என்பதால் தான் வெற்றிலைப் பாக்கை உண்ணும் போது முதல் மற்றும் இரண்டாவது நீர்களை துப்பி விட வேண்டும்.
 
மூன்றாவது மற்றும் நான்காவது நீர்களை விழுங்கிவிட வேண்டும். ஐந்தவது நீர் சுரக்கும் முன்பு வெற்றிலையை துப்பி விட வேண்டும். இதுவே தாம்பூலம் உண்ணும்  முறையாகும்.
 
காலையில் பாக்கு அதிகமாகவும், வெற்றிலை, சுண்ணாம்பு குறைவாகவும் மென்றால் மலக்குற்றம் நீங்கி இரண்டு முதல் நான்கு முறை பேதியாகும். எனவே மந்தம்  மலச்சிக்கல் உள்ளவர்கள் காலையில் பாக்கை அதிகமாகவும், வெற்றிலை சுண்ணாம்பு குறைவாகவும் சேர்த்து கொள்ள வேண்டும். மதியம் சுண்ணாம்பு சிறிது  அதிகமாகவும் வெற்றிலை பாக்கு குறைவாகவும் மென்றால் நல்ல பசி உண்டாகும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்