வன்முறை செய்யும் இஸ்லாமியர்கள் அப்பாவிகளா? – உப்பள்ளி கலவரத்திற்கு எடியூரப்பா கண்டனம்!

புதன், 20 ஏப்ரல் 2022 (09:27 IST)
கர்நாடக மாநிலம் உப்பள்ளியில் காவல் நிலையம் இஸ்லாமிய குழுவால் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து முன்னாள் முதல்வர் எடியூரப்பா கண்டனம் தெரிவித்துள்ளார்

என்ன நடந்தது உப்பள்ளியில்..?

கர்நாடகாவின் தார்வார் மாவட்டம் உப்பள்ளியை சேர்ந்தவர் அபிஷேக் ஹையர்மத். இவர் உப்பள்ளியில் உள்ள இஸ்லாமிய வழிபாட்டு தளத்தில் காவிக்கொடி பறப்பது போல போட்டோ மார்பிங் செய்து தனது வாட்ஸப் ஸ்டேட்டஸில் வைத்துள்ளார்.

இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரில் அபிஷேக் கைது செய்யப்பட்டு உப்பள்ளி காவல் நிலையத்தில் வைக்கப்பட்டார். ஆனால் அபிஷேக்கை தங்களிடம் ஒப்படைக்க வேண்டுமென இஸ்லாமியர்கள் சிலர் காவல் நிலையத்தில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இரவில் காவல் நிலையத்தில் குவிந்த அவர்கள் காவல் நிலையத்தை கல் வீசி தாக்க தொடங்கியதால் காவலர்கள் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

எடியூரப்பா கண்டனம்

இந்த காவல் நிலைய தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டோரை காவல்துறை கைது செய்த நிலையில், அப்பாவி மக்களை போலீஸார் கைது செய்வதாக காங்கிரஸ் கண்டனம் தெரிவித்ததாக தெரிகிறது.


காங்கிரஸின் இந்த கூற்றை மறுத்து பேசியுள்ள முன்னாள் முதல்வர் எடியூரப்பா “உப்பள்ளியில் கலவரம் நடந்துள்ளது. இதன் பின்னணியில் அதன் பின்னணியில் ஒரு முஸ்லிம் அமைப்பின் தலைவர் தான் இருந்துள்ளார் என்பது அனைவருக்கும் தெரியும். அவர்கள் காவல் நிலையத்தை தாக்கியதுடன், வாகனங்களையும் சேதப்படுத்தியுள்ளனர்.

இந்த தாக்குதலில் 12 போலீஸார் காயம் அடைந்துள்ளனர். இப்படியான தாக்குதல் நடத்தியவர்களை அப்பாவிகள் என சொல்வீர்களா? தவறு செய்தவர்களை போலீஸார் கைது செய்து வரும் நிலையில் அப்பாவிகளை கைது செய்வதாக காங்கிரஸ் கூறுகிறது. பெங்களூரில் இருந்து கொண்டு பேசாமல் உப்பள்ளி வந்து சம்பவம் நடந்த பகுதிகளை பார்த்துவிட்டு பேச வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்