ரயிலில் பெண்ணுக்கு கூட்டு பாலியல் பலாத்காரம்.. தண்டவாளத்தில் தூக்கி எறிந்ததில் பெண்ணின் கால் துண்டிப்பு..!

Siva

செவ்வாய், 8 ஜூலை 2025 (16:22 IST)
ஹரியானா மாநிலத்தில் ரயிலில் ஒரு பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும், அதன் பின்னர் ரயிலில் இருந்து தூக்கி எறியப்பட்ட நிலையில் தண்டவாளத்தில் விழுந்ததாகவும், அப்போது வந்த ரயில் மோதியதால் அவருடைய கால் துண்டிக்கப்பட்டதாகவும் கூறப்படும் அதிர்ச்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த 35 வயது பெண் ஒருவர் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்தபோது, அவருடைய கணவர் அனுப்பியதாக கூறி ஒரு நபர் அவரை அழைத்து சென்றுள்ளார். அதன்பின், ஒரு ரயிலின் காலி பெட்டியில் அந்த பெண்ணை ஏற்றி பலாத்காரம் செய்துள்ளார். அதை தொடர்ந்து மேலும் இருவரும் பலாத்காரம் செய்த நிலையில், மூவரும் சேர்ந்து அந்த பெண்ணை ரயிலில் இருந்து தூக்கி எறிந்துள்ளனர். அப்போது அந்த பெண் தண்டவாளத்தில் விழுந்த நிலையில், அந்த தண்டவாளத்தில் வந்த ரயில் அவர் மீது மோதியதில் கால் துண்டானது.
 
அந்தப் பெண் கதறி அழுததை பார்த்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில், அந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருவதாகவும், கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் தேடப்பட்டு வருவதாகவும் காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
 
இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலமாக ஹரியானா மாறி வருவதாக எதிர்க்கட்சியினர் கடும் விமர்சனம் செய்து வருகின்றனர்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்