மோடியை சந்திக்காமல் சீன பிரதமருடன் எலான் மஸ்க் சந்தித்தது ஏன்.? ப.சிதம்பரம் கேள்வி..!

Senthil Velan

திங்கள், 29 ஏப்ரல் 2024 (21:06 IST)
பிரதமர் மோடியைச் சந்திக்காமல் சீனப் பிரதமரை எலான் மஸ்க் சந்தித்தது எதைக் காட்டுகிறது? இவை சிந்திக்க வேண்டிய விஷயங்கள் அல்லவா? என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
 
உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரும், டெஸ்லா வாகன உற்பத்தி நிறுவனத்தின் தலைவரும், எக்ஸ் நிறுவனத்தின் தலைவருமான எலான் மஸ்க், ஏப்ரல் 21, 22 ஆகிய தேதிகளில் இந்தியா வந்து பிரதமர் மோடியை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியானது. 
 
ஆனால்  தனது இந்திய பயணத்தை எலான் மஸ்க் ஒத்திவைத்தார். இதன் தொடர்ச்சியாக சீனாவுக்கு திடீா் பயணம் மேற்கொண்ட எலான் மஸ்க்,  அந்நாட்டு பிரதமரை சந்தித்துப் பேசினார். இது தற்போது பேசும் பொருளாக மாறி உள்ள நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்
 
அதில், டெஸ்லா கார் கம்பெனியின் அதிபர் எலான் மஸ்க் இந்தியாவுக்கு வருவதற்கு நாள் குறித்திருந்தார். பிரதமர் மோடியுடன் பேசிய பிறகு இந்தியாவில் கார் தயாரிக்கும் பெரிய தொழிற்சாலையை அமைக்கும் முடிவை மஸ்க் அறிவிப்பார் என்று அரசு எதிர்பார்த்தது கடந்த வாரம் தன் இந்தியா பயணத்தை நாள் குறிப்பிடாமல் மஸ்க் ஒத்திவைத்தார். டெஸ்லா கம்பெனியின் "அவசர வேலைகளால்" பயணம் ஒத்தி வைக்கப்பட்டது என்று காரணம் சொல்லப்பட்டது
 
ஆனால், நேற்று மஸ்க் சீனாவுக்குச் சென்றார், சீனப் பிரதமருடன் பேச்சு வார்த்தை நடத்தினார். டெஸ்லா கம்பெனியின் நவீன ஓட்டுநனர் இல்லாத காரை சீனாவில் தயாரிப்பது பற்றி இருவரும் பேசினார்கள் என்று அறிவிக்கப்பட்டது. சீனாவில் மிகப் பெரிய கார் தொழிற்சாலையை மஸ்க் அமைப்பார் என்று நம்பப்படுகிறது.

ALSO READ: ஆன்லைன் ரம்மிக்கு பறிபோகும் அப்பாவி உயிர்கள்.! தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!!
 
இந்தியப் பயணத்தை ஒத்திவைத்து மஸ்க், சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டது எதைக் காட்டுகிறது? பிரதமர் மோடியைச் சந்திக்காமல் சீனப் பிரதமரைச் சந்தித்தது எதைக் காட்டுகிறது? இவை சிந்திக்க வேண்டிய விஷயங்கள் அல்லவா என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்