சமீபத்தில் திருமணம் ஆன புதுமண தம்பதிகள் உத்தரகாண்ட் மாநிலத்திற்கு தேனிலவு செல்ல தயாராகி கொண்டிருந்தபோது, திடீரென புதுமணப்பெண் தனது காதலனுடன் ஓடி போய்விட்டார். இதையடுத்து, அந்தப் பெண்ணின் கணவர், "நல்லவேளை உயிர்பிழைத்தேன்" என்று பேட்டி அளித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் பாதாவ் மாவட்டத்தை சேர்ந்த சுனில் என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த 20 வயது பெண் ஒருவருக்கும் கடந்த மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணம் ஆகி ஒரு வாரம் மட்டுமே கணவர் வீட்டில் இருந்த மணப்பெண், பின்னர் தாய் வீட்டுக்கு சென்ற சில நாட்களில் காதலனுடன் தலைமறைவானார்.
இந்த நிலையில், சுனில் தனது மனைவியை காணவில்லை என்று காவல்துறையில் புகார் அளித்தார். அதே காவல் நிலையத்திற்கு வந்த, ஓடிப்போன மணப்பெண், தான் சுனிலுடன் வாழ விரும்பவில்லை என்றும், தன்னுடைய காதலனுடன் வாழ விரும்புவதாகவும் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, இரு குடும்பத்தினரும் காவல்துறையினர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தி, திருமணத்தை முறித்து கொண்டனர். இது குறித்து சுனில் கூறுகையில், "தேனிலவுக்கு எனது மனைவியை உத்தரகாண்ட் அழைத்து செல்ல திட்டமிட்டிருந்தேன். நல்லவேளை, ராஜ ரகுவன்ஷி போல எனது வாழ்க்கை முடிய வில்லை. தற்போது மகிழ்ச்சியாக இருக்கிறேன். என் வாழ்க்கை பாழாகவில்லை," என்று தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.