அமெரிக்காவின் பரஸ்பர வரிவிதிப்பு தற்காலிக ஒத்திவைப்பு காலம் ஜூன் 9ம் தேதி முடிவடைய உள்ள நிலையில் இந்தியாவுடன் குறைந்த வரி ஒப்பந்தம் மேற்கொள்ள உள்ளதாக ட்ரம்ப் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றுள்ள ட்ரம்ப் அமெரிக்க சட்ட நடைமுறையில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறார். அவ்வாறாக சமீபத்தில் அமெரிக்காவுடன் வணிகம் செய்யும் அனைத்து நாடுகளுக்கும் பரஸ்பர வரிவிதிப்பை அறிவித்தார். அதன்படி இந்தியாவிற்கும் 26 சதவீதம் வரி விதிக்கப்பட்டது.
பின்னர் வரிவிதிப்பை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக ட்ரம்ப் அறிவித்தார். இந்த காலக்கெடு 9ம் தேதி முடிவடைய உள்ள நிலையில் இந்தியாவுடன் குறைந்த வரி ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்ள உள்ளதாக ட்ரம்ப் கூறியுள்ளார்.
இதுபற்றி பேசிய அவர் “நாங்கள் இந்தியாவுடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்ள முடியும் என்று நினைக்கிறேன். அந்த ஒப்பந்தம் நாம் இந்தியாவிற்குள் சென்று போட்டியிடக் கூடிய ஒரு ஒப்பந்தமாக இருக்கும். இந்தியாவுடன் மிகக் குறைந்த வரிகளுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. இந்த ஒப்பந்தம் இரு நாடுகளை சேர்ந்த நிறுவனங்களும் சமமாக போட்டியிட வகை செய்யும்” என்று கூறியுள்ளார்.
அமெரிக்க நிறுவனங்களுக்கான வரிகள் இந்தியாவில் குறைக்கப்பட்டால் இந்திய உள்நாட்டு வணிகங்களுக்கு போட்டியாக அமெரிக்க நிறுவனங்களும் ஈடுபடும் என அஞ்சப்படுகிறது. ஒருவேளை இப்படியான ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டால் இந்திய தொழில்துறை பெரும் சரிவை சந்திக்கும் என அச்சம் தெரிவிக்கிறார்கள் தொழில் முனைவோர் சிலர்.
Edit by Prasanth.K