இந்தியாவில் தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்கு போன்ற அத்தியாவசிய காய்கறிகளின் விலை உயர்வை கட்டுப்படுத்த, மத்திய அரசு மானிய விலையில் வெங்காயம் விற்பனை செய்யும் புதிய திட்டத்தை தொடங்கியுள்ளது.
இந்தத் திட்டம் நாடு முழுவதும் விரிவாக செயல்படுத்தப்படும். இதற்காக தேசிய வேளாண்மை கூட்டுறவு விற்பனை சம்மேளனம், தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு மற்றும் பிற கூட்டுறவு அமைப்புகளுடன் இணைந்து நடமாடும் வாகனங்கள் மூலம் வெங்காயம் மானிய விலையில் விற்பனை செய்யப்படும்.
வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு போன்ற பயிர்கள் பருவநிலை மாற்றங்களால் அதிகம் பாதிக்கப்படுகின்றன. குறிப்பாக, திடீர் மழை, வெப்ப அலைகள், மற்றும் புயல் போன்ற நிகழ்வுகள் பயிர்களை நேரடியாக சேதப்படுத்துகின்றன. இது சந்தையில் தட்டுப்பாட்டை உருவாக்கி, விலையை அதிகரிக்கிறது. இந்த ஆண்டு, பருவநிலை மாற்றங்களால் வெங்காய விளைச்சல் பாதிக்கப்பட்டதால், அதன் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
அதேசமயம், வெங்காயத்தின் விலையில் ஏற்படும் இதுபோன்ற ஏற்ற இறக்கங்கள் தொடர்கதையாக உள்ளன. கடந்த சில ஆண்டுகளில் ஏற்றுமதித் தடை, இருப்பு கட்டுப்பாடு, மற்றும் இறக்குமதி போன்ற பல நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துள்ளது.