அப்போ கச்சத்தீவு..! இப்போ அருணாச்சல பிரதேசம்..! சர்ச்சையை கிளப்பிய சீனா...!!

Senthil Velan

திங்கள், 1 ஏப்ரல் 2024 (14:53 IST)
அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள 30 இடங்களுக்கு சீனா தனது மொழியில் புதிய பெயர்களை வைத்துள்ளது. கட்சித்தீவை தாரை வார்த்ததை போல், அருணாச்சலப் பிரதேசத்தையும் இந்தியா கைவிடுமா அல்லது சீனாவின் அத்துமீறலுக்கு  முற்றுப்புள்ளி வைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

வங்காள விரிகுடாவின், பாக் நீரிணை பகுதியில், இந்தியாவிற்கும், இலங்கைக்கு இடையில் கச்சத்தீவு அமைந்துள்ளது. 1974 ஆம் ஆண்டுஜூன் மாதம், 21 ஆம் தேதி தமிழகத்தின் கருத்தை கேட்காமல், இந்திய நாடாளுமன்றத்திற்கு கூட தெரிவிக்காமல், கச்சத் தீவை இலங்கைக்கு தாரை வார்க்கும் ஒப்பந்தத்தில் அப்போதைய பிரதமராக இருந்த இந்திரா காந்தி கையெழுத்திட்டார்.
 
தமிழக மீனவர்களின் எதிர்காலத்தை சிறிதும் கருத்தில் கொள்ளாமல் மேற்கொள்ளப்பட்ட அந்த ஒப்பந்தம், ஆதம் பாலம் முதல், பாக் ஜலசந்தி வரையிலான கடல் பரப்பில், இந்தியாவிற்கும், இலங்கைக்கும் இடையில் எல்லைக்கோட்டை வகுத்தது. இதன் மூலம், காலம் காலமாக, இந்திய நிலபரப்பின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்துவந்த கச்சத் தீவு இலங்கைக்குத் தாரைவார்க்கப்பட்டது.
 
1976ஆம் ஆண்டு மார்ச் 22ஆம் தேதி, இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையில், வங்காள விரிகுடா மற்றும் மன்னார் வளைகுடா பகுதியில் கடல் எல்லையை பிரிப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. அந்த ஒப்பந்தத்தை தொடர்ந்து, இரு நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்களுக்கு இடையில் பரிமாற்றம் செய்யப்பட்டுக்கொண்ட கடிதத்தில், இருநாட்டு மீனவர்களும் எல்லை தாண்டி மீன் பிடிக்க கூடாது என்ற நிபந்தனை சேர்க்கப்பட்டது. 

இதையடுத்து கடலுக்கு செல்லும் தமிழக மீனவர்களை எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்து வருவதால் மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் கேள்வி குறியாகி உள்ளது. கச்சத்தீவை மீட்க வேண்டும் என தமிழ்நாடு பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வரும் நிலையில், மத்திய அரசு அதனை கண்டு கொள்ளவில்லை. 
 
கச்சத்தீவை தாரை வார்த்தது போல், தற்போது அருணாச்சல பிரதேசத்தை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள 30 இடங்களுக்கு சீனா தனது மொழியில் புதிய பெயர்களை வைத்துள்ளது.
 
இந்தியாவின் வடகிழக்கு மாநிலத்தில் உள்ள இந்தியாவின் ஓர் அங்கமான அருணாச்சலப் பிரதேசம் மீது சீனா தொடர்ந்து உரிமை கொண்டாடி வருகிறது. அருணாச்சலப் பிரதேசத்தின் பல பகுதிகளை தங்களின் மொழியில் புதிய பெயர்களை அறிவித்தும், தங்கள் நாட்டு வரைபடத்தில் இணைத்தும் சீனா தொடர்ச்சியான அத்துமீறல்களை செய்து வருகிறது. சீன சிவில் விவகார அமைச்சகம், அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள இடங்களை மறுப்பெயரிட்டு வருகிறது. ஏற்கனவே மறுப்பெயரிட்டு 3 பட்டியல்களை வெளியிட்டது.
 
2017ல் அருணாச்சல பிரதேசத்தில் உள்ள ஆறு இடங்களின் பெயர்களை மாற்றி முதல் பட்டியலையும், 2021ல் 15 இடங்களின் பெயர்களை மாற்றி இரண்டாவது பட்டியலையும், 2023ல் 11 இடங்களுக்கான பெயர்களை மாற்றி மூன்றாவது பட்டியலையும் வெளியிட்டது.
 
தற்போது நான்காவது பட்டியலை சீனா வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்தியா - சீனா எல்லை கட்டுப்பாடு கோடு அருகே உள்ள அருணாச்சலப் பிரதேச மாநிலத்துக்கு சொந்தமான 30 இடங்களின் பெயர்களை சீனா மாற்றியுள்ளது.
 
சீனாவால் மறுபெயரிடப்பட்ட அருணாச்சலப் பிரதேசத்துக்கு சொந்தமான இடங்களின் பட்டியலில் 11 குடியிருப்பு பகுதிகள், 12 மலைகள், நான்கு ஆறுகள், ஒரு ஏரி, ஒரு மலைப்பாதை உள்ளன. 
 
இவற்றின் பெயர்களை சீன மொழியான மாண்டரின் மொழியிலும், அதேபோல் திபெத்திய மொழியிலும் மாற்றியுள்ளது சீன அரசு. இதனை தனது அரசு நாளிதழிலும் சீனா வெளியிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
 
அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள இடங்களின் பெயரை மாற்றும் சீனாவின் இத்தகைய நடவடிக்கைக்கு பலமுறை கண்டித்துள்ள இந்தியா, அருணாச்சலப் பிரதேச மாநிலம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்று கூறி சீனாவின் செயல்களை நிராகரித்து வருகிறது.

ALSO READ: தேர்தல் முன்னேற்பாடுகள் தீவிரம்..! சத்யபிரதா சாகு நாளை ஆலோசனை..!!

கட்சித்தீவை தாரை வார்த்ததை போல், அருணாச்சலப் பிரதேசத்தையும் இந்தியா கைவிடுமா அல்லது சீனாவின் அத்துமீறலுக்கு  முற்றுப்புள்ளி வைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்