கடைசி வரை உடல் கிடைக்கல.. மகளின் துண்டான கைக்கு இறுதி சடங்கு! - நெஞ்சை உலுக்கிய கேரள தந்தையின் சோகம்!

Prasanth Karthick

திங்கள், 5 ஆகஸ்ட் 2024 (10:14 IST)

கேரளாவில் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களில் பலரது உடல்கள் கிடைக்காத நிலையில் தந்தை ஒருவர் தனது மகளின் ஒற்றை கையை வைத்து இறுதி சடங்கு செய்தது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

 

கேரளாவில் கனமழை பெய்து வரும் நிலையில் வயநாட்டில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவால் சூரல்மலை உள்ளிட்ட 3 கிராமங்கள் இருந்த இடம் தெரியாமல் நிலச்சரிவில் அழிந்தது. இதுவரை பலியானோர் எண்ணிக்கை 387 ஆக உயர்ந்துள்ள நிலையில் 200க்கும் மேற்பட்டவர்களை இன்னும் கண்டுபிடிக்கவே முடியவில்லை. பல இடங்களில் இறந்தவர்களின் கை, கால்கள் என உடல் பாகங்கள் தனியாக கிடைப்பதால் அது யாருடையது என கண்டுபிடிப்பதிலும் சிக்கல் உள்ளது.

 

வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் தனது கணவருடன் ஜிசா என்ற பெண் வசித்து வந்தார், இவரது தந்தை ராமசாமி. நிலச்சரிவு சம்பவம் அறிந்ததும் அங்கு வந்த அவர் கடந்த 6 நாட்களாக தொடர்ந்து தனது மகளை தேடி வந்தார். பல்வேறு கட்ட தேடுதல் பணிக்கு பிறகு ஒரு கை கிடைத்தது. அதில் இருந்த திருமண மோதிரமும், தனது கணவரின் பெயரையும் ஜிசா பச்சை குத்தியிருந்ததை வைத்து அது தனது மகளின் கைதான் என தந்தை ராமசாமி உறுதி செய்தார்.

 

எவ்வளவு தேடியும் அவரது மகளின் உடல் கிடைக்காத நிலையில் அந்த ஒரு கையை வைத்து இறுதி சடங்குகள் செய்தார் ராமசாமி. அந்த நேரத்தில் அவர் கதறி அழுத சம்பவம் பார்ப்போரின் நெஞ்சை உலுக்கும் விதமாக இருந்தது. மேலும் மாயமான பலரின் உடல்கள் கிடைக்காத நிலையில் அவர்களது குடும்பத்தார் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்