அகமதாபாத் விமான விபத்து வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், அந்த வீடியோவை எடுத்ததாக கூறப்படும் 17 வயது சிறுவன் ஆர்யன் இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளாததால் கவுன்சிலிங் சிகிச்சை அளித்து வருவதாக கூறப்படுகிறது.
அகமதாபாத் விமான நிலைய ஓடுதளத்துக்கு மிக அருகில் உள்ள ஒரு பகுதியில் தனது தந்தையுடன் ஆர்யன், வசித்து வருகிறார். ஆர்யனின் தந்தை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலை செய்கிறார். விமான விபத்தின் வைரல் வீடியோவை ஆர்யன் தான் என செய்தி நிறுவனங்கள் வெளியிட்ட பிறகு, குற்றப்பிரிவுக் குழுவினர் ஆர்யனின் வீட்டிற்கு சென்று விசாரித்தனர்.
ஆனால் ஆர்யன் அந்த வீடியோவை தான் எடுக்கவில்லை என்றும், தனது நண்பர் எடுத்ததை தான் ஸ்கிரீன் ரெக்கார்ட் செய்ததாகவும் கூறியுள்ளார். அந்த வீடியோவை தனது தந்தையுடன் பகிர்ந்ததாகவும், அவர் அதை ஆன்லைனில் பதிவு செய்து இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் இந்த விபத்தை நேரில் பார்த்தது முதல் ஆர்யன் மன உளைச்சலில் இருக்கிறார் என்றும், அவருக்கு சரியாகத் தூக்கம் வருவதில்லை என்றும், இதனால் அவருக்கு கவுன்சிலிங் கொடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.