உத்தர பிரதேச மாநிலம், மீரட்டில் ரம்ஜான் மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை தொழுகையை முன்னிட்டு, சாலைகளில் தொழுகை நடத்துவதைத் தடுக்க காவல்துறை கடுமையான எச்சரிக்கைகளை விடுத்துள்ளது. இந்தக் கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தொழுகைகள் மட்டுமின்றி, பிற மதச் செயல்பாடுகளும் மசூதிகளிலேயே நடத்தப்பட வேண்டும் என்றும், பொதுவழிகளில் தொழுகை நடத்தத் தடை என்றும் மீரட் எஸ்.பி. ஆயுஷ் விக்ரம் சிங், தெரிவித்துள்ளார். இந்த எச்சரிக்கையை மீறுபவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அவர்களின் பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்கள் ரத்து செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசு அதிகாரிகள், மதத் தலைவர்க ஆகியோர்களுடன் கலந்துரையாடியதன் பிறகே இந்த உத்தரவுகள் அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும், பதட்டம் ஏற்பட்டுள்ள பகுதிகள் அடையாளம் காணப்பட்டு, அங்கு சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.