கேரளாவில் உள்ள கண்ணூர் நகரில் ஒரு தெருநாய் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. பல இடங்களில் 56 பேரை தாக்கி படுகாயப்படுத்திய அந்த நாய், பின்னர் இறந்து கிடந்தது. இந்த சம்பவம் நகரையே பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
காலை 11 மணியளவில் தொடங்கி, பிற்பகல் 1 மணி வரை நீடித்த இந்த சம்பவம், புதிய பேருந்து நிலையம், SBI வளாகம், பிரபாத் ஜங்ஷன் போன்ற முக்கிய நகர பகுதிகளில் நடைபெற்றது. குழந்தைகள் மற்றும் முதியவர்கள் உட்பட பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் கால்களில் கடிக்கப்பட்டனர். பலரை அந்த நாய் விரட்டி சென்று தாக்கியுள்ளது. குடைகள் மற்றும் பிற பொருட்களை பயன்படுத்தித் தற்காத்து கொள்ள முயன்றபோதிலும், நாயின் தாக்குதலில் இருந்து தப்ப முடியவில்லை.
கொட்டியூரைச் சேர்ந்த சாஜு என்பவர், பேருந்தில் இருந்து இறங்கி வங்கி நோக்கி சென்றபோது தாக்கப்பட்டார். நிதி நிறுவனங்களில் இருந்து வெளியேறியவர்களும், நகரத்தில் நடந்து சென்றவர்களும் காயமடைந்தனர்.
காயமடைந்த 56 பேரும் கண்ணூர் மாவட்ட மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி செலுத்தப்பட்டது. இருப்பினும், தடுப்பூசிக்கு ஒவ்வாமை ஏற்பட்ட இரண்டு பேர் மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவ கல்லூரிக்கு மாற்றப்பட்டனர்.
நாயின் இந்த விசித்திரமான நடத்தைக்கான காரணம் குறித்து அதிகாரிகள் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. ஆனால், நகரம் முழுவதும் தொடர்ந்து உஷார் நிலையில் உள்ளது. விலங்குகள் நல ஆர்வலர்கள் மற்றும் சுகாதார அதிகாரிகள் இது குறித்து விசாரணை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.