ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவிட முடியாது..! உச்சநீதிமன்றம் திட்டவட்டம்.!!

Senthil Velan

புதன், 14 பிப்ரவரி 2024 (17:52 IST)
ஸ்டெர்லைட் ஆலை பாதுகாப்பாக செயல்படுகிறதா என்று எந்த ஆய்வும் நடத்தாமல் உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய இயலாது என கூறியுள்ள உச்சநீதிமன்றம், ஆலையை ஆய்வு செய்ய நிபுணர் குழுவை அமைக்கலாம் என யோசனை தெரிவித்துள்ளது 
 
தூத்துக்குடியில் வேதாந்தா நிறுவனத்துக்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலை கடந்த 22 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது. ஆலை அமைந்துள்ள பகுதிகளில், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக பல்வேறு அமைப்பினர் போராட்டங்கள் நடத்தினர். 
 
கடந்த 2018ம் ஆண்டு மே 22ல் நடந்த போராட்டத்தின்போது, ஏற்பட்ட வன்முறையில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டது.
 
இதனிடையே ஸ்டெர்லைட் ஆலை மீதான தடை உத்தரவை நீக்கி, மீண்டும் திறக்கக்கோரி வேதாந்தா நிறுவனம் மற்றும் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
 
அரசின் உத்தரவையும், நீதிமன்ற உத்தரவையும் ஸ்டெர்லைட் நிர்வாகம் பின்பற்றவில்லை என்றும் நீதிமன்ற உத்தரவுகளை ஸ்டெர்லைட் நிர்வாகம் பலமுறை மீறியுள்ளது என்றும் தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
 
ஸ்டெர்லைட் ஆலை பாதுகாப்பாக செயல்படுகிறதா என்று எந்த ஆய்வும் நடத்தாமல் உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய இயலாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

ALSO READ: சமையல் எரிவாயுக்கு ரூ.500 மானியம்.! வேலையில்லா இளைஞர்களுக்கு ரூ.5,000 உதவித் தொகை..! பா.ம.க. அறிக்கை..!!
 
தமிழக அரசும், ஸ்டெர்லைட் நிர்வாகமும் ஒத்துக்கொண்டால் நிபுணர் குழு அமைத்து ஆய்வு செய்யலாம் என்றும் அதன் பிறகு ஆலையை திறப்பதா, வேண்டாமா என்பது தொடர்பாக முடிவு செய்யலாம் என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்