எனக்கு ஆளுனர் பதவி கொடுக்காவிட்டால் வழக்கு தொடர்வேன்: பாஜகவை மிரட்டும் முன்னாள் எம்பி..!

Mahendran

புதன், 7 ஆகஸ்ட் 2024 (10:20 IST)
எனக்கு ஆளுநர் பதவி கொடுக்காவிட்டால்  சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்வேன் என சிவசேனா முன்னாள் எம்பி, பாஜகவை மிரட்டி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்தில் ஒன்பது மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம் செய்யப்பட்ட நிலையில் இந்த நியமனத்தில் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்ற கடும் அதிருப்தி நிலவி வருகிறது.

இந்த நிலையில் சிவசேனா முன்னாள் எம்பி ஆனந்த் ராவ் என்பவர் தனக்கு ஆளுநர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் பதவி கிடைக்கவில்லை என்பதை அடுத்து கடும் அதிருப்தியில் உள்ளார்.

சமீபத்தில் அளித்த பேட்டியில் எனக்கு ஆளுநர் பதவி கொடுப்பதாக முதல்வர் ஷிண்டே  முன்னிலையில் மத்திய அமைச்சர் அமித்ஷா வாக்குறுதி அளித்தார். மக்களவைத் தேர்தலுக்கு முன்பே இரண்டு அமைச்சர் பதவி, இரண்டு ஆளுநர் பதவி கொடுப்பதாக வாக்குறுதி அளித்த நிலையில் அந்த வாக்குறுதியை பாஜக நிறைவேற்றவில்லை.

எனவே என்னை இன்னும் 15 நாட்களுக்குள் என்னை ஆளுநராக நியமனம் செய்ய வேண்டும், அப்படி நியமனம் செய்யவில்லை என்றால் அமராவதி முன்னாள் எம்பி நவநீத் ராணாவின் சாதி சான்றிதழ் செல்லும் என்று கூறி கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்வேன்’ என்று கூறியுள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்