இந்தூர் தம்பதிகள் ஆனா ராஜா மற்றும் சோனம் மேகாலயா மாநிலத்திற்கு தேனிலவு சென்ற நிலையில், ராஜா கொல்லப்பட்டார் என்றும், அவருடைய கொலையில் அவரது மனைவி சோனம் தொடர்பு இருப்பதாக போலீசார் சந்தேகித்து, அவரை கைது செய்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், மறைந்த ராஜாவின் தாயார் உமா என்பவர் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "இந்த தேனிலவு பயணத்தை முழுக்க முழுக்க சோனம் தான் ஏற்பாடு செய்தார். ஆனால் ரிட்டர்ன் டிக்கெட்டை கூட அவர் பதிவு செய்யவில்லை," எனத் தெரிவித்துள்ளார். இதன் மூலம், மேகாலயாவில் தனது கணவனை கொலை செய்யும் வகையில் திட்டமிட்டு இருக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
அது மட்டும் இல்லை, “என் மகன் ராஜா எங்கு சென்றாலும் புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பதில் விருப்பம் உள்ளவன். ஆனால் மேகாலயா சென்றபோது, ஒரு புகைப்படம் கூட எடுத்து அனுப்பவில்லை. இதுவும் எனக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது,” என்றும் கூறினார்.
“என் மகனை கொன்றது யாராக இருந்தாலும், அவரை தூக்கில் போடுங்கள்,” என்றும் தெரிவித்த அவர், “சோனம் என்னிடம் நன்றாகத்தான் நடந்து கொண்டாள். என்னை பார்க்கும் போதெல்லாம் கட்டிப்பிடிப்பாள், பாசமாக இருப்பாள். ஆனால் அதன் பின்னணியில், இப்படி ஒரு திட்டம் இருந்தது எனக்குத் தெரியாமல் போய்விட்டது,” என்றும் மறைந்த ராஜாவின் அம்மா உமா தெரிவித்துள்ளார்.