சபரிமலை ஐயப்பன் கோவில் ஒவ்வொரு தமிழ் மாதம் தொடங்கும் தேதியில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வரும் பங்குனி மாத பூஜைக்காக, மார்ச் 14ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம், மேல் சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடையை திறந்து தீபாராதனை நடத்துகிறார்.
பின்னர், மார்ச் 15ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை தினமும் பூஜை வழிபாடுகள் நடைபெறும். அதன் பின்னர், 19ஆம் தேதி இரவு நடை அடைக்கப்படும் என்றும் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும், பங்குனி மாத பூஜைக்காக தரிசனம் செய்ய வரும் பக்தர்கள், பதினெட்டாம் படி ஏறிய பிறகு, கொடி மரத்தில் இருந்து நேராக கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக மேம்பாலத்தை சுற்றி வந்து தரிசனம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைந்த நேரத்தில் ஐயப்பனை தரிசிக்க வாய்ப்பு உண்டு என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
தேவஸ்தானம் சார்பில் தங்க டாலர்கள் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், ஒரு கிராம் முதல் எட்டு கிராம் அளவிலான பண்டிகை கால சிறப்பு தங்க டாலர்கள் விற்பனை செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.