தோல்வியிலிருந்து பாடம் கற்று திரும்ப வருவோம்! – வாழ்த்து சொன்ன ராகுல்காந்தி!

Webdunia
வியாழன், 10 மார்ச் 2022 (16:24 IST)
நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தலில் ஒரு மாநிலத்தில் கூட காங்கிரஸ் வெற்றி பெறாத நிலையில் காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி தோல்வி குறித்து பேசியுள்ளார்.

உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, பஞ்சாப், மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல்கள் பல கட்டங்களாக நடந்து முடிந்தது. தற்போது 5 மாநிலங்களுக்கும் இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் ஆட்சி செய்து வந்த பஞ்சாபில் முதல்முறையாக ஆம் ஆத்மி வெற்றி பெற்றுள்ளது. உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூரில் பாஜக பெருவாரியான தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இதனால் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை 2 ஆக சரிவடைந்துள்ளது.

காங்கிரஸின் தோல்வி குறித்து பேசியுள்ள எம்.பி ராகுல்காந்தி “மக்களின் தீர்ப்பை பணிவுடன் ஏற்றுக் கொள்கிறேன். தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். தோல்வியிலிருந்து பாடம் கற்று இந்திய மக்களின் நலன்களுக்காக தொடர்ந்து பாடுபடுவோம். காங்கிரஸ் தொண்டர்களின் கடின உழைப்புக்கும், அர்ப்பணிப்புக்கும் என் நன்றி” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்