நாடாளுமன்றத்துக்கு வெளியே வினாத்தாள் கசிவு..! உள்ளே மழைநீர் கசிவு..! எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனம்..!!

Senthil Velan

வியாழன், 1 ஆகஸ்ட் 2024 (13:42 IST)
புதிய நாடாளுமன்றத்தில் மழை நீர் தேங்கிய நிலையில், வினாத்தாள் கசிவு வெளியே,  மழைநீர் கசிவு உள்ளே என்று காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கடுமையாக விமர்சித்துள்ளார்.  
 
டெல்லியில் கனமழை பெய்து வருவதால், நாடாளுமன்ற வளாகத்திற்குள் தண்ணீர் தேங்கியுள்ளது. இந்நிலையில் தண்ணீர் ஒழுகும் வீடியோக்களை காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்துள்ளன.
 
இந்த விவகாரம் தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர், பாராளுமன்றத்திற்கு வெளியே வினாத்தாள் கசிவு, பாராளுமன்றத்திற்கு உள்ளே மழைநீர் கசிவு என குறிப்பிட்டுள்ளார். புதிய பாராளுமன்ற கட்டிடம் கட்டி ஓராண்டு முடிவடைவதற்குள் தண்ணீர் கசிவு ஏற்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
 
பாராளுமன்றத்தில் மழைநீர் கசிவது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அகிலேஷ் யாதவ், பழைய பாராளுமன்ற கட்டிடம் இதை விட சிறப்பாக இருந்தது என்று குறிப்பிட்டுள்ளார். பலகோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் 'சொட்டு நீர் பாசன திட்டம்' நடக்கும் வரை நாம் ஏன் பழைய பாராளுமன்ற கட்டிடத்திற்கு செல்ல கூடாது என்று அவர் விமர்சித்துள்ளார்.

ALSO READ: 2 நாள் ஆளுநர்கள் மாநாடு..! டெல்லி புறப்பட்டு சென்றார் ஆளுநர் ரவி.!!
 
பாஜக ஆட்சியில் கட்டப்பட்ட ஒவ்வொரு புதிய கட்டிடத்திலும் நீர் கசிவு என்பது அவர்களின் அற்புதமான வடிவமைப்பின் ஒரு பகுதியா என்று பொதுமக்கள் கேட்கிறார்கள்  என்று அகிலேஷ் யாதவ் குறிப்பிட்டுள்ளார். 1200 கோடி செலவு செய்து கட்டப்பட்ட பாராளுமன்ற கட்டிடம் 120 ரூபாய் மதிப்பிலான பக்கெட்டை நம்பி உள்ளது என்று ஆம் ஆத்மி கட்சியும் விமர்சித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்