பீகார் சட்டமன்றத் தேர்தலுக்குச் சில வாரங்களே உள்ள நிலையில், தேர்தல் வியூக நிபுணராக இருந்து அரசியல்வாதியாக மாறிய பிரசாந்த் கிஷோர், தனது ஜன் சுராஜ் கட்சி குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
வரவிருக்கும் பீகார் தேர்தலில் தான் போட்டியிட போவதில்லை, எனினும், தனது கட்சி அனைத்து 243 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும் என்றும், 150 இடங்களை கைப்பற்றுவதே இலக்கு என்றும் அறிவித்தார். 150 இடங்களுக்கும் குறைவாக பெற்றால் அது தோல்வியாக கருதப்படும் என்றும் எச்சரித்தார்.
"எங்களுக்கு 10-க்கும் குறைவான இடங்கள் கிடைக்கும் அல்லது 150-க்கும் அதிகமான இடங்கள் கிடைக்கும். இதைத் தவிர வேறு எதுவும் நிகழாது. மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்து, 'பாய்ந்து குதித்து' வாக்களித்தால், அனைத்து கணிதங்களும் தவறாகி, 150-க்கும் மேல் வெற்றி பெறுவோம். இல்லையெனில், 10-க்கும் குறைவான இடங்களே கிடைக்கும்" என்று அவர் தெரிவித்தார்.
பீகாரின் துயரங்களை போக்க ஜன் சுராஜ் மட்டுமே மாற்று என்று குறிப்பிட்ட பிரசாந்த் கிஷோர், ஊழல் மற்றும் மக்களின் அவல நிலை தொடர வேண்டுமானால் வேறு எந்த கட்சிக்கு வேண்டுமானாலும் வாக்களிக்கலாம், ஆனால் நல்லாட்சிக்கு ஜன் சுராஜ் அவசியம் என்று வலியுறுத்தினார்.