பிரசாந்த் நடித்த 'அந்தகன்' திரைப்படம் நல்ல வெற்றியை பெற்றதை தொடர்ந்து, அவர் அடுத்ததாக ஹரி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார் என்று சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில், இந்த படத்தின் கதை விவாதத்திற்காக ஹரி தனது குழுவினர்களுடன் மும்பை சென்று இருப்பதாகவும், அவருடன் பிரசாந்தும் சென்று இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கதை விவாதம் மட்டுமின்றி, இந்த படத்திற்காக ஒரு பாலிவுட் ஹீரோயினை ஒப்பந்தம் செய்யவும் படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும், இதற்காக சில பாலிவுட் ஹீரோயின்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. விரைவில் ஹீரோயின் முடிவு செய்யப்பட்டு, அதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாலிவுட்டின் முன்னணி ஹீரோயின்கள் இருவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும், அதில் ஒருவர் பேச்சுவார்த்தைகளில் கிட்டத்தட்ட உடன்பாடு எட்டிவிட்டதாகவும், கால்ஷீட் நாட்கள் குறித்த பேச்சுவார்த்தை மட்டும் நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஹரி - பிரசாந்த் இணையும் படம் பிரம்மாண்டமாகவும், பெரிய பட்ஜெட்டிலும் தயாரிக்கப்பட உள்ளதாகவும், விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது.