குப்பையிலிருந்து தங்கம் உருவாக்கும் நவீன மெஷின்! - பாஜக அமைச்சருக்கு அகிலேஷ் யாதவ் குட்டு!

Prasanth Karthick

செவ்வாய், 27 மே 2025 (13:23 IST)

குப்பையிலிருந்து தங்கம் உருவாக்கும் நவீன இயந்திரத்தை தயாரித்து வருவதாக பாஜக அமைச்சர் பேசியது குறித்து அகிலேஷ் யாதவ் விமர்சித்துள்ளார்.

 

உத்தர பிரதேச மாநில பால்வளத்துறை அமைச்சராக இருப்பவர் தரம்பால் சிங். சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய தரம்பால் சிங் “குப்பையில் இருந்து தங்கத்தை தயாரிக்கும் இயந்திரம் ஒன்றை மீரட்டில் தயார் செய்து வருகிறோம். அது விரைவில் பயன்பாட்டிற்கு வந்துவிடும்” என பேசியிருந்தார். அவரது இந்த பேச்சு வைரலான நிலையில், அவர் சாத்தியமற்ற விஷயங்களில் கனவு காண்பதாக எதிர்கட்சியான காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் விமர்சித்தன.

 

தரம்பால் சிங் கருத்து குறித்து பேசியுள்ள சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் “குப்பைகளை தங்கமாக மாற்றும் இயந்திரங்களை பற்றி அப்புறம் பேசலாம். முதலில் கன்னோஜில் கட்டப்பட்டு திறக்கப்படாமல் உள்ள பால் ஆலையை செயல்படுத்தி விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதற்கு கவனம் செலுத்துங்கள்.

 

பாஜகவின் ஊழல் இப்போதும் மிகவும் வளர்ச்சியடைந்துவிட்டது. அவர்கள் குப்பைகளை அகற்றும் ஒப்பந்தங்களில் கூட கமிஷன் பார்க்க ஆரம்பித்துவிட்டனர். இவர்களது கருத்துக்களை கேட்க உத்தரபிரதேசம் முழுவதுமே பாக்கியம் பெற்றுள்ளது” என விமர்சித்துள்ளார்.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்