மணிப்பூரில் மீண்டும் வன்முறை.. 2 பேர் பலி.. போலீஸ் குவிக்கப்பட்டதால் பதட்டம்..!

Siva

திங்கள், 2 செப்டம்பர் 2024 (12:44 IST)
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக பெரும் வன்முறையாக வெடித்த நிலையில் சமீபகாலமாகத்தான் அங்கு மீண்டும் அமைதி திரும்பியதாக கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது மீண்டும் மணிப்பூரில் வன்முறை நிகழ்ந்ததாகவும் இந்த வன்முறைக்கு இரண்டு பேர் பலியானதாகவும் இதையடுத்து போலீசார் குவிக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

மணிப்பூரில் மேற்கு இம்பால் என்ற பகுதியில் திடீரென பயங்கரவாத கும்பல் ராக்கெட்டுடன் கூடிய எறிகுண்டுகளை குவித்ததாகவும் அவர்கள் உயர் தொழில்நுட்பம் வாய்ந்த ஆளில்லா விமானங்களின் உதவியுடன் எறிகுண்டுகளை வீசியதாகவும் கூறப்படுகிறது. அது மட்டும் இன்றி துப்பாக்கி சூடு நடத்தியதை அடுத்து ஒரு பெண் உள்பட இரண்டு பேர் பலியானதாகவும், செய்தி சேகரிக்க சென்ற நிருபர் உள்பட 10 பேர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் உடனடியாக மணிப்பூரில் வன்முறை ஏற்பட்ட பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு உள்ளதாகவும் வன்முறை நிகழ்ந்த பகுதியில் உள்ள மக்கள் வேறு இடங்களுக்கு பாதுகாப்பிற்காக சென்று கொண்டிருப்பதாகவும் தற்போது நிலைமை ஓரளவு சீராக இருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மணிப்பூரில் கடந்த சில மாதங்களாக அமைதி நிலவிய நிலையில் தற்போது மீண்டும் வன்முறை நிகழ்ந்ததை அடுத்து பெரும் பதட்ட நிலை ஏற்பட்டுள்ளது.

Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்